வைக்கோலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் கவலை


வைக்கோலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 18 Feb 2020 11:30 PM GMT (Updated: 18 Feb 2020 7:14 PM GMT)

பூதலூர் பகுதியில் வைக்கோலுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. அறுவடை எந்திரங்களுக்கு இருந்த தட்டுப்பாடு நீங்கி உள்ளதால் விவசாயிகள் அறுவடை பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

பூதலூர் வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் அறுவடை பணிகள் பரவலாக நடைபெற்று வருகிறது. அறுவடையாகும் நெல்லை விவசாயிகள் வயல்களில் இருந்து நேரடியாக கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள். இருப்பு வைத்து விற்க எண்ணும் விவசாயிகள் பூதலூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்குக்கு கொண்டு சென்று சேமித்து வைக்கின்றனர்.

வைக்கோல்

அறுவடை செய்யப்பட்ட பின்னர் வயலில் கிடக்கும் வைக்கோல், எந்திரங்கள் மூலம் கட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கட்டு வைக்கோல் தற்போது ரூ.30-ல் இருந்து ரூ.40 வரை விற்பனையாகிறது. ஒரு ஏக்கரில் 30 கட்டுகள் வரை வைக்கோல் கிடைப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

கடந்த ஆண்டு ஒரு ஏக்கர் வைக்கோல் விலை ரூ.2 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு ஒரு ஏக்கரில் கிடைக்கும் வைக்கோல் ரூ.900 முதல் ரூ.1,200 வரை மட்டுமே விலை போகிறது. வைக்கோலுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். பெரும்பாலும் பிற மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகளே லாரியுடன் வந்த வைக்கோலை கட்டி ஏற்றி செல்கின்றனர்.

சரிவடைய வாய்ப்பு

இவர்கள் உடனடியாக பணம் கொடுத்து விடுவதால் கிடைக்கிற விலைக்கு விவசாயிகள் வைக்கோலை விற்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

முழு வீச்சில் அறுவடை நடைபெறுவதால் வைக்கோல் விலை மேலும் சரிவடைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

Next Story