குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி பெரம்பலூரில் முஸ்லிம்கள் ஊர்வலம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி பெரம்பலூரில் முஸ்லிம்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 19 Feb 2020 11:30 PM GMT (Updated: 19 Feb 2020 4:48 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி பெரம்பலூரில், முஸ்லிம்கள் ஊர்வலம் நடத்தினர்.

பெரம்பலூர்,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைமையில் அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அமைப்புகள், கட்சிகள் சார்பில் நேற்று சென்னையில் சட்டமன்ற முற்றுகை போராட்டமும், மாவட்டம் தோறும் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக மாவட்ட அனைத்து மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் ரோவர் வளைவு பகுதியில் கூடினர். இதையடுத்து கூட்டமைப்பு தலைவர் முகம்மது முனீர் மிஸ்பாஹி தலைமையில் காஜா மொய்னுதீன் பாகவி, முகம்மது மன்சூர் காசிமி ஆகியோர் முன்னிலையில் முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அமைப்புகள், கட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ரோவர் வளைவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

கோஷம் எழுப்பினர்

ஊர்வலத்தின் முன்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக சென்றனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும், இவைகளை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டசபையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதை தடுக்க பாலக்கரை வளைவு அருகே இரும்பு தடுப்பு கம்பிகளை அடுக்கி வைத்து, போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் முஸ்லிம்கள் ஊர்வலமாக வெங்கடேசபுரம், பாலக்கரை ரவுண்டானா வழியாக சென்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே சென்று முற்றுகை போராட்டத்தை நடத்தினர்.

போராட்டம்

பின்னர் அங்கு கூடியிருந்த முஸ்லிம்களிடையே அனைத்து மஹல்லா ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர், நிர்வாகிகள், முஸ்லிம் இயக்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். இதைத்தொடர்ந்து சென்னை வண்ணாரப்பேட்டை போல் பெரம்பலூரில் ஓரிரு தினங்களில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.. இதையடுத்து முஸ்லிம்கள் கலைந்து சென்றனர்.

Next Story