சேலம் அருகே நூற்பாலை கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை உறவினர்கள் முற்றுகை-போலீஸ் குவிப்பு


சேலம் அருகே நூற்பாலை கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை உறவினர்கள் முற்றுகை-போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2020 12:00 AM GMT (Updated: 27 Feb 2020 8:14 PM GMT)

சேலம் அருகே நூற்பாலை கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். நூற்பாலை நிர்வாகத்தின் நெருக்கடியால் தான் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறி உறவினர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் அந்த ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேச்சேரி,

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பேரூராட்சி 15-வது வார்டு பெரிய கிணறு பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவருடைய மனைவி தேவகி (39). இவர்களுக்கு சுஜித் (19) என்ற மகன் உள்ளார். இவர், ராசி புரத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார்.

ஜலகண்டாபுரம் அருகே தோரமங்கலம் காப்பரத்தான்பட்டியில் உள்ள அகிலா நூற்பாலையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் பணியில் சேர்ந்து நிரந்தர தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார்.

பணி நீக்கம்

இவர் தொழிற்சங்கத்தில் ஈடுபாட்டுடன் இருந்து வந்ததால், தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முன் நின்றதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலை நிர்வாகம் அவரை பணி நீக்கம் செய்தது. இதையடுத்து அவர் தொழிலாளர் நலத்துறை கோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு என்று வழக்கு தொடர்ந்து அந்த ஆலையில் பணியை தொடர உத்தரவு பெற்றார்.

மேலும் அவர் பணியில் இல்லாத காலத்திற்கும், சம்பளத்தை வழங்கிட கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 8 மாத காலமாக வெங்கடேசன் அதே ஆலையில் வேலை செய்து வந்தார்.

இதனிைடயே அவருக்கு ஆலை நிர்வாகம் கடந்த சில மாதங்களாக பணியில் நெருக்கடி கொடுத்து வந்ததாகவும், இழப்பீட்டு தொகை வழங்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் தனது மனைவியிடம் இது குறித்து கூறி ஆதங்கப்பட்டதாக தெரிகிறது.

தற்கொலை

இந்த நிைலயில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் இரவு பணிக்கு ஆலைக்கு சென்றார். அப்போது மிகுந்த மனஉளைச்சலில் இருந்த அவர், ஆலையில் இருந்த திறந்த வெளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனிடையே நேற்று காலையில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் ஆலையில் உள்ள கிணற்றில் வெங்கடேசன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், ஜலகண்டாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே வெங்கடேசன் இறந்த தகவல் அறிந்து அங்கு வந்த அவரது உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் ஆலையை முற்றுகையிட்டனர்.

வெங்கடேசனின் தற்கொலைக்கு ஆலை நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்கவும், அவருக்கு கோர்ட்டு உத்தரவின் பேரில் ஏற்கனவே வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை வழங்கவும் ஆலை நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும், மேலும் ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை

இதையடுத்து ஆலை நிர்வாகம், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் சண்முகராஜா, மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜாத்தி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகளுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, காலை 6 மணிக்கு தொடங்கி நடந்த முற்றுகை போராட்டம் 10 மணியளவில் முடிவுக்கு வந்தது.

அதன்பிறகு வெங்கடேசனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முற்றுகை போராட்டம் காரணமாக பதற்றம் நிலவியதால் ஆலை முன்பு நேற்று போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story