சிப்ஸ் கம்பெனியில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்


சிப்ஸ் கம்பெனியில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 27 Feb 2020 11:30 PM GMT (Updated: 27 Feb 2020 10:39 PM GMT)

சிப்ஸ் கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

ஈரோடு,

ஈரோடு அருகே கிளியம்பாடி பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 36). இவருக்கு சொந்தமான சிப்ஸ் கம்பெனி ஈரோடு கொல்லம்பாளையம் வண்டிகாரன்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வந்தது. அந்த கம்பெனியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் புதிதாக தொடங்கினார். கம்பெனியின் கட்டிடம் தகர மேற்கூரையினால் ஆனது.

இந்தநிலையில் நேற்று மாலையில் சுனில்குமார் உள்பட ஊழியர்கள் சிலர் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெரிய சட்டியில் எண்ணெய் ஊற்றப்பட்டு சிப்ஸ்கள் பொரிக்கப்பட்டது. அதில் திடீரென எண்ணெயில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதைத்தொடர்ந்து அருகில் இருந்த எண்ணெயிலும் தீப்பரவியது.

பல லட்சம் ரூபாய்

தீ பிடித்து எரிந்ததும் ஊழியர்கள் அனைவரும் கம்பெனியில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார்கள். மேலும், சிப்ஸ் பேக்கிங் செய்யும் எந்திரங்களிலும் தீ பரவி கம்பெனி முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட தீயணைப்பு அதிகாரி புளுகாண்டி தலைமையில் உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி வெங்கடாசலம், நிலைய அதிகாரி மயில்ராஜூ மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பற்றி எரிந்த தீயை தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீ விபத்தில் கம்பெனியில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் எரிந்து நாசமானது. மேலும், சிப்ஸ் விற்பனை செய்து வசூலிக்கப்பட்ட பணமும் எரிந்தது. அதில் தீயில் கருகிய நாணயங்களை அங்கிருந்தவர்கள் சுத்தம் செய்து எடுத்தனர்.

Next Story