பாலியல் பலாத்கார வழக்கில் 24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது கேரளாவில் பிடிபட்டார்


பாலியல் பலாத்கார வழக்கில் 24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது கேரளாவில் பிடிபட்டார்
x
தினத்தந்தி 27 Feb 2020 11:47 PM GMT (Updated: 27 Feb 2020 11:47 PM GMT)

பாலியல் பலாத்கார வழக்கில் தலைமறைவாக இருந்தவரை 24 ஆண்டுகளுக்குப் பின் கேரளாவில் போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சுரக்குடி சந்திவெளி தோப்பு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). கடந்த 1996-ம் ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், நீதிமன்ற வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை பல இடங்களில் தேடியும் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தலைமறைவு

கடந்த 24 ஆண்டுகளாக பாலியல் பலாத்கார வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சுதாகரை, தேடப்படும் குற்றவாளியாக ஆணை பிறப்பித்து, அவரை உடனே கைது செய்து ஆஜர் படுத்துமாறு, மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் பன்வால், போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம் ஆகியோர் உத்தரவின்பேரில், திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் மற்றும் சிறப்பு அதிரடிப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து, சுதாகரை, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேடி வந்தனர்.

கேரளாவில் கைது

இந்த நிலையில் சுதாகர் கேரள மாநிலம் அடூர் பகுதியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. கடந்த 25-ந் தேதி சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் தலைமையிலான போலீசார் கேரளா விரைந்து சென்று, சுதாகரை கைது செய்தனர். பின்னர் அவரை காரைக்கால் கொண்டு வந்து, மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கார்த்திகேயன், சுதாகரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் புதுச் சேரியில் உள்ள காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story