பெரம்பலூர்-அரியலூரில் உலக மகளிர் தின விழா கலெக்டர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது


பெரம்பலூர்-அரியலூரில் உலக மகளிர் தின விழா கலெக்டர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது
x
தினத்தந்தி 7 March 2020 11:00 PM GMT (Updated: 7 March 2020 7:58 PM GMT)

பெரம்பலூர்- அரியலூரில் உலக மகளிர் தின விழா, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.

அரியலூர்,

பெரம்பலூரில், மாவட்ட மகளிர் திட்ட செயலாக்க அலகின் சார்பில் உலக மகளிர் தின விழா கலெக்டர் சாந்தா தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் சாந்தா பேசுகையில், பெண்களாகிய அனைவரும் ஆண்களுக்கு இணையாக பெற்ற உரிமையை தங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெண்களே பெண் குழந்தைகளை வெறுக்கக்கூடாது. பிறக்கும் குழந்தைகளில் ஆண், பெண் பேதம் பார்க்காமல் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய அவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க வேண்டும். பெண்களின் பொருளாதார தற்சார்பு என்பது பிறரை தனது தேவைகளுக்காக எதிர்பார்க்காமல் சுயமரியாதையுடன் வாழ்வது என்பதே. மேலும் பெண்கள் 21 வயதுக்கு முன்பாக திருமணம் செய்யக்கூடாது என்றார். இதையடுத்து கலெக்டர் சாந்தா பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி, மருத்துவம், சுகாதாரம், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சாதனை புரிந்த 11 மகளிருக்கு சாதனையாளர் விருதினை வழங்கி பாராட்டினார். வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் தாலுக்காக்களை சேர்ந்த 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.40 லட்சத்து 49 ஆயிரம் நேரடிக்கடன் இணைப்பு வழங்கப்பட்டது. முன்னதாக உலக மகளிர்தின விழா உறுதிமொழி எடுக்கப்பட்டது.

விழாவில் மகளிர் திட்ட அலுவலர் தேவநாதன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) கீதாராணி, அனைத்து துறை பெண் அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூரில்...

இதேபோல் அரியலூரில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் உலக மகளிர் தின விழா கலெக்டர் ரத்னா தலைமையில் கொண்டாடப்பட்டது. மேலும், மாவட்டத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள 141 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.21 லட்சத்து 15 ஆயிரம் சுழல்நிதிக்கான காசோலைகளையும், பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் மகளிர் தின விழா தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் களையும் கலெக்டர் ரத்னா வழங்கினார். மேலும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஊக்குனர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவில், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் திட்ட இயக்குனர்கள் சுந்தர்ராஜன் (ஊரக வளர்ச்சி முகமை), ஜெயராமன் (மகளிர் திட்டம்), உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story