திருமுருகன்பூண்டியில் 2-வது நாள் தேரோட்டம் இன்று தெப்பத்திருவிழா


திருமுருகன்பூண்டியில் 2-வது நாள் தேரோட்டம் இன்று தெப்பத்திருவிழா
x
தினத்தந்தி 9 March 2020 9:45 PM GMT (Updated: 9 March 2020 8:06 PM GMT)

திருமுருகன்பூண்டியில் 2-வது நாளாக நடைபெற்ற தேரோட்டத்தில் பெண்கள் உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

அனுப்பர்பாளையம், 

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகநாதசுவாமி கோவிலில் மாசி மாதத் திருவிழாவான தேரோட்டம் நேற்று முன்தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று மாலை 2-வது நாளாக தேரோட்டம் நடைபெற்றது. இதில் முதலாவது தேரோடும் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் தேர் பக்தர்களால் இழுத்து வரப்பட்டு தேர்நிலையை அடைந்தது.

இதையடுத்து அம்பாள் தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. இந்த தேரை பெண்கள் உற்சாகமாக வடம் பிடித்து சென்றனர். தேருக்கு முன்பாக மேள,தாளம் முழங்க பெண்கள் கும்மியடித்தும், கோலாட்டத்துடன் நடனமாடியபடியும் சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேர்த்திருவிழாவின் ஒரு பகுதியாக தெப்பத்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு கோவிலை ஒட்டி உள்ள தெப்பக்குளத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story