திருவாரூரில் நடைபெறும் வணிகர் மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் தொழில் முனைவோர் சங்க கூட்டத்தில் தீர்மானம்


திருவாரூரில் நடைபெறும் வணிகர் மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் தொழில் முனைவோர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 9 March 2020 10:48 PM GMT (Updated: 9 March 2020 10:48 PM GMT)

மே 5-ந் தேதி திருவாரூரில் நடைபெறும் வணிகர் மாநாட்டில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தொழில் முனைவோர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி,

கொட்டாரம் அனைத்து வியாபாரிகள் தொழில் முனைவோர் சங்க பொதுக்குழு கூட்டம் கொட்டாரம் மிஷன் வளாகத்தில் உள்ள சி.எஸ்.ஐ. அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வியாபாரிகள் சங்க தலைவர் எட்வர்ட் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் சிவராமபிள்ளை, முன்னாள் செயலாளர் பால்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் ரவீந்திரன் வரவேற்று பேசினார். சங்க செயலாளர் ராமச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் நாகராஜன், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் உள்பட பலர் பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வணிகர் மாநாடு

கொட்டாரம் மூத்தார் குளத்தின் கரை பகுதிகளை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகிறார்கள். மனித கழிவுகளால் ஏற்படும் சுகாதாரக்கேடு குறித்து பொதுமக்களிடையே பேரூராட்சி நிர்வாகம் தண்டோரா மூலமும், துண்டு பிரசுரங்கள் மற்றும் பிளக்ஸ்போர்டுகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொட்டாரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கழிப்பறை வசதி செய்யப்பட வேண்டும். மே மாதம் 5-ந்தேதி வணிகர் தினத்தையொட்டி திருவாரூரில் நடைபெறும் இந்திய வணிகர் வாழ்வுரிமை மாநில மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரளாக சென்று பங்கேற்பது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சங்க பொருளாளர் முத்து, செயற்குழு உறுப்பினர் சண்முகம், சட்ட ஆலோசகர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story