கொரோனா வைரஸ் பீதியால் கோழி இறைச்சி வாங்க அச்சம்: நாகையில் மீன்கள் விலை கடும் உயர்வு


கொரோனா வைரஸ் பீதியால் கோழி இறைச்சி வாங்க அச்சம்: நாகையில் மீன்கள் விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 15 March 2020 11:00 PM GMT (Updated: 15 March 2020 9:23 PM GMT)

கொரோனா வைரஸ் பீதியால் கோழி இறைச்சி வாங்க பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். நாகையில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது. மீன்கள் வாங்க அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி, விழுந்தமாவடி, வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், கோடியக்கரை, கோடியக்காடு உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. நாகை மாவட்டத்தில் மீன்பிடித்தொழில் பிரதான தொழிலாக உள்ளது.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலும், 50 ஆயிரம் பேர் மீன்பிடி தொழில் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதுபோக 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ்

மத்தி, கானாங்கெழுத்தி, இறால், கனவா, திருக்கை, பாறை, துள்ளுகெண்டை, வஞ்சிரம் உள்ளிட்ட ஏராளமான வகை மீன்களும், நண்டுகளும் மீனவர்கள் பிடித்து வருகின்றனர். பின்னர் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து திருவாரூர், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, ஓசூர், கோவை, விழுப்புரம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்தநிலையில் உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. கோழி இறைச்சியில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவுகிறது என சமுக வலைதளங்களில் பரவி வருகிறது. இது தவறான தகவல் என்று விழிப்புணர்வு வீடியோக்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

மீன்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்

இருந்த போதிலும் கொரோனா வைரஸ் பீதியால் கோழி இறைச்சியை பெரும்பாலானோர் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் கோழி இறைச்சியின் விலை வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்து வருகிறது. நாகை பகுதிகளிலும் கோழி இறைச்சியை வாங்குவதற்கு பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதற்கு பதிலாக கடல் உணவான மீன்களை அதிகம் வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலும், மீன் மார்க்கெட்டிலும் மீன்கள் வாங்க நேற்று ஏராளமானோர் குவிந்தனர். இதனால் மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்கள்வரத்து குறைவாக இருந்ததால் மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் கிலோ ரூ.500-க்கு விற்ற வஞ்சிரம் ரூ.600-க்கும், ரூ.450-க்கு விற்ற வாவல் ரூ.550-க்கும், ரூ.500-க்கு விற்கப்பட்ட சீலா ரூ.600-க்கும், ரூ.300-க்கு விற்ற இறால் ரூ.350-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Next Story