கலப்பு திருமணம் செய்த இளம்பெண் சேலம் கோர்ட்டில் ஆஜர்


கலப்பு திருமணம் செய்த இளம்பெண் சேலம் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 16 March 2020 11:00 PM GMT (Updated: 16 March 2020 7:57 PM GMT)

கலப்பு திருமணம் செய்த இளம்பெண் சேலம் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

சேலம்,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் செல்வம் (வயது 25). பவானி குருப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் இளமதி (23). செல்வம், இளமதி 2 பேரும் பட்டதாரிகள் ஆவார்கள்.

இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இந்த காதலுக்கு இளமதியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கொளத்தூரை அடுத்த காலாண்டியூரில் உள்ள திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஈஸ்வரனிடம் தஞ்சம் அடைந்தனர். பின்னர், கலப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப் படுகிறது.

கோர்ட்டில் ஆஜர்

இதையடுத்து இளமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து ஈஸ்வரன், செல்வம் ஆகிய 2 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் இளமதியின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இளமதி திடீரென்று மாயமானார். பின்னர் இளமதி மேட்டூர் அனைத்து போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். இதையடுத்து இளமதியை போலீசார் அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தனது மனைவியை மீட்டுத்தரும்படியும், சாதி பெயரை சொல்லி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் கொளத்தூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இளமதி தனது பெற்றோர், உறவினர்களுடன் சேலம் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் அவர் தனது பெற்றோருடன் சென்றார்.

Next Story