வெள்ளியணை அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி தண்ணீர் குடிக்க சென்றபோது பரிதாபம்


வெள்ளியணை அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி தண்ணீர் குடிக்க சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 24 March 2020 12:00 AM GMT (Updated: 23 March 2020 6:06 PM GMT)

வெள்ளியணை அருகே தண்ணீர் குடிக்க சென்றபோது பள்ளி மாணவர்கள் 2 பேர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி வெள்ளியணை அருகே உள்ள நத்தப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் நாயக்கர் மகன் நவீன்குமார் (வயது 15). அதேபகுதியை சேர்ந்தவர் முத்தாநாயக்கர் மகன் சத்தியராஜ் (14). இதில் நவீன்குமார் அதே பகுதியிலுள்ள காணியாளம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பும், சத்தியராஜ் வில்வமரத்துப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நவீன்குமார், சத்தியராஜ் இருவரும் தங்களது பெற்றோர்களுக்கு உதவியாக ஆடு, மாடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கிணற்றில் மூழ்கி பலி

மாணவர்கள் 2 பேரும் நேற்று காலை தங்கள் ஊரின் அருகே உள்ள கள்ளபொம்மன்பட்டி பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் தாகம் எடுக்கவே இருவரும் அப்பகுதியிலிருந்த தனியார் தோட்டத்து கிணற்றில் இறங்கி தண்ணீர் குடிக்க முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாணவர் தவறி கிணற்றில் விழ, அவனை காப்பாற்றும் முயற்சியில் மற்றொரு மாணவனும் கிணற்றில் இறங்கியதில் 2 பேரும் நீரில் மூழ்கினர்.

இந்தநிலையில் தண்ணீர் குடிக்க சென்ற மாணவர்கள் திரும்பி வராததால் அப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சிலர் கிணற்றுக்கு சென்று பார்த்தனர். அங்கு மாணவர்கள் கிணற்றில் மூழ்கியது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் கிணற்றில் இறங்கி மாணவர்கள் 2 பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்து பார்த்தபோது அவர்கள் இறந்துவிட்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறையில் ஆடு, மாடு மேய்க்க சென்ற மாணவர்கள் கிணற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story