கிருஷ்ணகிரியில் மருந்து கடைகளில் முக கவசம், கிருமி நாசினி பதுக்கலா? குடிமைப்பொருட்கள் போலீசார் சோதனை


கிருஷ்ணகிரியில் மருந்து கடைகளில் முக கவசம், கிருமி நாசினி பதுக்கலா? குடிமைப்பொருட்கள் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 24 March 2020 11:30 PM GMT (Updated: 24 March 2020 9:19 PM GMT)

கிருஷ்ணகிரி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்கள் பதுக்கப்படுகிறதா? என்பது குறித்து நேற்று குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை மேற் கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, மத்திய-மாநில அரசுகள் மற்றும் சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப், சென்னை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சாந்தி ஆகியோரின் உத்தரவின் பேரில், கோவை உட்கோட்ட போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மேற்பார்வையில் அந்தந்த பகுதியில் உள்ள மருந்து கடைகளில் முக கவசம், சோப்பு, கிருமி நாசினி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் நேற்று இன்ஸ்பெக்டர் தில்லைநடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி, போலீசார் சம்பத், மகாராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மருந்தகங்கள், மருந்து வினியோகஸ்தர்கள் மற்றும் மருந்து நிறுவனங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகிறோம். முக கவசம் மூன்றடுக்கு ரூ.10-க்கும், இரண்டடுக்கு ரூ.8-க்கும் விற்பனை செய்ய வேண்டும். மேலும் கைகளுக்கு பயன்படுத்தப்படும் கிருமி நாசினி 200 மில்லி லிட்டர் ரூ.100-க்கு விற்பனை செய்ய வேண்டும். அரசின் உத்தரவை மீறி பதுக்கினாலோ அல்லது அதிக விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அவ்வாறு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த ஆய்வில் பல மருந்து கடைகளில் கிருமி நாசினி, முக கவசங்கள் இருப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.


Next Story