சம்பளம் பெறுவதற்காக 144 தடை உத்தரவை மீறி திரண்ட தொழிலாளர்கள் - ராணிப்பேட்டை அருகே பரபரப்பு


சம்பளம் பெறுவதற்காக 144 தடை உத்தரவை மீறி திரண்ட தொழிலாளர்கள் - ராணிப்பேட்டை அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 25 March 2020 10:15 PM GMT (Updated: 25 March 2020 9:49 PM GMT)

144 தடை உத்தரவை மீறி ராணிப்பேட்டையில் சம்பளம் பெறுவதற்காக தொழிலாளர்கள் தொழிற்சாலை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிப்காட்( ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டையை அடுத்த வி.சி.மேட்டூர் மற்றும் மாந்தாங்கல் பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான 2 ஷூ தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் 2 தொழிற்சாலைகளிலும் கடந்த 23-ந் தேதி அன்று 400-க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், ராணிப்பேட்டை போலீசார், தொழிற்சாலைகளின் நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பள பாக்கியில் ஒரு பகுதியை நேற்று தருவதாக நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. அதன்படி சம்பளத்தை பெற 30-க்கும் மேற்பட்டோர் நேற்று வி.சி.மோட்டூரில் உள்ள தொழிற்சாலை முன்பு திரண்டனர்.

இது பற்றி தகவலறிந்து அங்கு வந்த ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் ஒரு இடத்தில் கூட்டமாக கூடக்கூடாது என கூறியதன் பேரிலும், நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரிலும் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story