ஊரடங்கு உத்தரவால் தாய்க்கு இறுதி சடங்கு செய்ய வரமுடியாமல் தவித்த ராணுவ வீரர்


ஊரடங்கு உத்தரவால் தாய்க்கு இறுதி சடங்கு செய்ய வரமுடியாமல் தவித்த ராணுவ வீரர்
x
தினத்தந்தி 27 April 2020 10:45 PM GMT (Updated: 27 April 2020 8:43 PM GMT)

ஊரடங்கு உத்தரவால் தாய்க்கு இறுதி சடங்கு செய்ய வரமுடியாமல் தவித்த ராணுவ வீரர் செல்போனில் தாயாரின் உடலை பார்த்து கதறி துடித்தார்.

மேச்சேரி, 

ஊரடங்கு உத்தரவால் தாய்க்கு இறுதி சடங்கு செய்ய வரமுடியாமல் தவித்த ராணுவ வீரர் செல்போனில் தாயாரின் உடலை பார்த்து கதறி துடித்தார்.

இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே புக்கம்பட்டி அழகாகண்டனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மாது (வயது 67). இவர்களது மகன் சக்திவேல் (42). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல மாது, வீட்டில் வளர்த்து வரும் பசு மாட்டில் பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயக்கம் போட்டு விழுந்து இறந்து விட்டார். இதைப்பார்த்து அவரது கணவர் தங்கவேல் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து உறவினர்கள் ராஜஸ்தானில் உள்ள அவரது மகன் சக்திவேலுக்கு தகவல் கொடுத்தனர். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர் உடனடியாக ராஜஸ்தானில் இருந்து வரமுடியாத நிலையில் தவித்தார். இதைத்தொடர்ந்து உறவினர்கள் செல்போனில் வீடியோ கால் மூலம், அவருக்கு இறந்த தாயின் முகத்தை காண்பித்தனர். இதைப்பார்த்து அவர் கதறி துடித்து அழுதார். இந்த நெகிழ்வான சோக சம்பவம் பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கியது.

இதைத்தொடர்ந்து காலை 11.45 மணிக்கு மாதுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்குகளை அவரது கணவர் தங்கவேல் செய்தார். தாய்க்கு இறுதி சடங்கு கூட செய்ய முடியவில்லையே என்று ராணுவ வீரர் சக்திவேல் கதறி அழுது துடித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.


Next Story