குளச்சலில் டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு; மது பாட்டில்கள் எரிந்து நாசம் போலீஸ் விசாரணை


குளச்சலில் டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு; மது பாட்டில்கள் எரிந்து நாசம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 8 May 2020 1:21 AM GMT (Updated: 8 May 2020 1:21 AM GMT)

குளச்சலில் டாஸ்மாக் கடைக்கு தீ வைக்கப்பட்டது. மதுபாட்டில்கள் எரிந்து நாசமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

குளச்சல், 

குளச்சலில் டாஸ்மாக் கடைக்கு தீ வைக்கப்பட்டது. மதுபாட்டில்கள் எரிந்து நாசமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

டாஸ்மாக் கடை

குளச்சல், இரும்பிலி சந்திப்பில் ஒரே கட்டிடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஊடங்கு காரணமாக கடந்த 43 நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. கடைகளின் உள்ளே மது பாட்டில்கள் பூட்டி வைக்கப்பட்டு இருந்தன. டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்ததையொட்டி நேற்று முன்தினம் அதிகாரிகள் கடைக்கு சென்று முன்னேற்பாடுகளை செய்தனர். குறிப்பாக மதுபிரியர்கள் வரிசையாக நின்று மது வாங்க வசதியாக கம்புகளால் தடுப்புகள் கட்டினர்.

நேற்று காலையில் ஊழியர்கள் கடைகளை திறக்க சென்ற போது, ஒரு கடையின் உள்ளிருந்து புகை மூட்டம் வந்து கொண்டிருந்தது. உடனே, அவசரம் அவசரமாக கடையை திறந்து உள்ளே பார்த்த போது மது பாட்டில்கள் வைக்கப்பட்டு இருந்த அறையில் தீ எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவ விடாமல் தடுத்து அணைத்தனர். ஆனாலும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் எரிந்து நாசமாயின.

மர்ம நபர்கள் கைவரிசை

தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஷ்வேஷ் சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அருகில் இருந்த கடையை திறந்து சோதனை செய்த போது அங்கு கடையின் உள்ளே ஜன்னலையொட்டி எரிந்த காகித துண்டு கிடந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதிகாலையில் யாரோ மர்ம நபர்கள் இரண்டு கடைகளுக்கு தீ வைக்கும் நோக்கத்தில் காகிதத்தில் தீ வைத்து கடைகளின் ஜன்னல் வழியாக உள்ளே வீசியதாக தெரிகிறது. இதில் ஒரு கடையில் தீபற்றி எரிந்து மது பாட்டில்கள் நாசமாகின. மற்றொரு கடையில் தீ அணைந்ததால் மதுபாட்டில்கள் அதிர்ஷ்டவசமாக தப்பின.

போலீசார் விசாரணை

இதையடுத்து தடயவியல் நிபுணர் ஜீவானந்தம் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தார். இதுகுறித்து குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி, கடைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே பக்கத்தில் உள்ள கடையில் நேற்று மதியம் 12 மணி முதல் விற்பனை நடந்தது. மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.

Next Story