பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம்


பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 11 May 2020 10:00 PM GMT (Updated: 11 May 2020 11:32 PM GMT)

பந்தலூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப ஒப்படைக்க லஞ்சம் கேட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்களை போலீசார் கண்காணித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது.

இதற்கிடையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும்படி காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்கள் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் தலைமை காவலர் சுமா ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க உரியவர்களிடம் ரூ.1,500 லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் விசாரணை நடத்தியதில், அவர்கள் லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.

Next Story