பணி முடிந்து வீடு திரும்பிய போது ஸ்கூட்டர் கவிழ்ந்து செவிலியர் பலி மற்றொருவர் படுகாயம்


பணி முடிந்து வீடு திரும்பிய போது ஸ்கூட்டர் கவிழ்ந்து செவிலியர் பலி மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 16 May 2020 3:34 AM GMT (Updated: 16 May 2020 3:34 AM GMT)

காவேரிப்பட்டணம் அருகே ஸ்கூட்டர் கவிழ்ந்த விபத்தில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த செவிலியர் பலியானார். அவருடன் சென்ற மற்றொரு செவிலியர் படுகாயம் அடைந்தார்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி குமுதா (வயது 39). அதே பகுதியை சேர்ந்தவர் மாதையன். இவரது மனைவி பாலாமணி (44). இவர்கள் 2 பேரும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் செவிலியர்களாக பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில் செவிலியர்கள் குமுதா, பாலாமணி ஆகியோர் நேற்று தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தனர். தொடர்ந்து அவர்கள் பணி முடிந்து வீட்டுக்கு ஸ்கூட்டரில் காவேரிப்பட்டணம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காவேரிப்பட்டணம் அருகே இடைபையூர் பக்கமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையின் குறுக்கே தெருநாய் ஒன்று ஓடியது. இதில் நிலைதடுமாறி ஸ்கூட்டர் தடுப்பு சுவர் மீது மோதியது.

செவிலியர் பலி

இந்த விபத்தில் செவிலியர்கள் குமுதா, பாலாமணி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு அவர்கள் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிசசை பலன் அளிக்காமல் குமுதா பலியானார். பாலாமணி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story