மாநில பா.ஜனதா மீது தாக்கு: மோடி, அமித்ஷாவை திடீரென புகழ்ந்த சிவசேனா


மாநில பா.ஜனதா மீது தாக்கு: மோடி, அமித்ஷாவை திடீரென புகழ்ந்த சிவசேனா
x
தினத்தந்தி 16 May 2020 11:30 PM GMT (Updated: 16 May 2020 11:20 PM GMT)

எம்.எல்.சி. தேர்தல் விவகாரம் தொடர்பாக மராட்டிய மாநில பாரதீய ஜனதாவை தாக்கி உள்ள சிவசேனா பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் திடீரென புகழ்ந்துள்ளது.

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எம்.எல்.சி.யாக போட்டியின்றி தேர்வாகி தனது முதல்-மந்திரி பதவியை தக்க வைத்து கொண்டார். முன்னதாக அவர் மாநிலத்தில் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் தனது பதவியையும் காப்பாற்றிக் கொள்ள போராட வேண்டி இருந்தது.

இதுதொடர்பாக சிவசேனா பாரதீய ஜனதாவையும், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியையும் விமர்சித்து வந்தது. பின்னர் உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசி இந்த பிரச்சினையில் தலையிடுமாறு கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து, கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட 9 எம்.எல்.சி. பதவிகளுக்கு தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்தது. தற்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எம்.எல்.சி. ஆகி முதல்-மந்திரி பதவியை காப்பாற்றி கொண்ட நிலையில் அக்கட்சி பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் திடீரென புகழ்ந்து உள்ளது. அதே நேரத்தில் மராட்டிய மாநில பாரதீய ஜனதாவை தாக்கி உள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

மோடி, அமித்ஷா

உத்தவ் தாக்கரே இந்த மாத இறுதிக்குள் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடுவார் என சிலர் நினைத்து இருந்தனர். அதன்பின்னர் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும். அதிகாலை நேரத்தில் பதவி ஏற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என கருதினார்கள்.

ஆனால் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவும் மாநிலத்தில் அரசியல் ஸ்திரமின்மையை அனுமதிக்கவில்லை. அரசு கொரோனாவை எதிர்த்து போராடும் போது இதுபோன்ற அரசியலை பற்றி சிந்திப்பது நல்லதல்ல.

கடந்த 6 மாதங்களில் மாநில அரசின் செயல்பாடுகளில் தடைகளை உருவாக்கும் முயற்சிகள் இருந்த போதிலும், உத்தவ் தாக்கரே மேல்-சபைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டார்.

அரசு கொரோனா வைரசுக்கு எதிராக போராடும் போது, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு சந்திரகாந்த் பாட்டீல் எதை வேண்டுமானாலும் செய்வார். முன்னதாக அவர்கள் அஜித்பவாரை அழைத்து சென்றார்கள். ஆனால் இப்போது அவர் இந்த அரசாங்கத்தின் பக்கபலமாக இருக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story