கம,கம வாசனையோடு களைகட்டிய பிரியாணி விற்பனை


கம,கம வாசனையோடு களைகட்டிய பிரியாணி விற்பனை
x
தினத்தந்தி 26 May 2020 2:43 AM GMT (Updated: 26 May 2020 2:43 AM GMT)

திருப்பூரில் பிரியாணி கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பிரியாணி பார்சல் வாங்கி சென்றனர்.

உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் திருப்பூரிலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்ததால் முஸ்லிம்கள் வழக்கமான கூட்டுத் தொழுகையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும் திருப்பூரில் உள்ள முஸ்லிம்கள் அவரவர் வீட்டிலேயே குடும்பத்தினருடன் தொழுகையை மேற்கொண்டனர். இது ஒருபுறமிருக்க, ரம்ஜான் என்றாலே நினைவுக்கு வரக்கூடிய பிரியாணி தயாரிப்பும் நேற்று திருப்பூரில் களைகட்டியது. முஸ்லிம்கள் பெரும்பாலானோர் உறவினர்களோடு ஒன்று சேர்ந்து பிரியாணி சமைத்து உண்டு மகிழ்ந்தனர்.

இதேபோல் நண்பர்கள் மற்றும் ஏழைகளுக்கும் பிரியாணியை வழங்கினர். இவ்வாறு நேற்று பல இடங்களிலும் அதிக அளவில் பிரியாணி தயார் செய்யப்பட்டதால் திருப்பூரில் ஆடு, கோழி, மாட்டிறைச்சி போன்றவை அதிக அளவில் விற்பனையானது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளில் நேற்று அதிகாலை முதலே இறைச்சி விற்பனை மும்முரமாக நடந்தது. இதேபோல் பெரிய கடை வீதி, காங்கேயம் கிராஸ் ரோடு உள்ளிட்ட மாநகரின் பல பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான பிரியாணி கடைகளிலும் பிரியாணி விற்பனை மும்முரமாக நடந்தது. இதில் சில கடைகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பிரியாணி பார்சல் வாங்கி சென்றனர். இவ்வாறு வீடு, கடைகள் என எங்கும் பிரியாணி மயமாய் இருந்ததால் திருப்பூரின் பல வீதிகள் பிரியாணி வாசத்தால் கமகமத்தன.

Next Story