ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிள்களில் மணல் அள்ளிய 2 பேர் சிக்கினர்


ஸ்ரீவில்லிபுத்தூரில்   மோட்டார் சைக்கிள்களில் மணல் அள்ளிய 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 1 Jun 2020 12:45 AM GMT (Updated: 1 Jun 2020 12:45 AM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருட்டுத்தனமாக மோட்டார் சைக்கிள்களில் மணல் அள்ளிய 2 பேர் சிக்கினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருட்டுத்தனமாக மணல் அள்ளும் பணி நடைபெற்று வருவதாக சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அவர் கனிமவள கடத்தல் தடுப்பு குழுவினரை கண்காணிக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து கனிமவள கடத்தல் தடுப்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நேற்று அதிகாலை 4 மணியளவில் செண்பகத்தோப்பு சாலையில் மணல் அள்ளிக் கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. அதனை தடுத்து நிறுத்தியபோது அந்த டிராக்டர் வேகமாக சென்று அருகே உள்ள கிராமத்திற்குள் புகுந்தது. அப்போது சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் டிராக்டரின் சக்கரங்கள் சிக்கிக் கொண்டன. அப்போது டிராக்டரை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து சிங்கம்மாள்புரம் கிராம நிர்வாக அதிகாரி சுந்தரம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் அள்ளி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை ஓட்டி வந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் கிராமத்துக்கு உட்பட்ட திருவண்ணாமலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் மூடை மூடையாக மணல் கடத்துவதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கனிமவள கடத்தல் தடுப்பு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 மோட்டார் சைக்கிளில் 4 பேர் மணல் மூடைகளை ஏற்றி கொண்டு வந்தனர். கனிமவள கடத்தல் தடுப்பு குழுவினரை பார்த்தவுடன் 2 மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மணல் மூடையோடு தப்பி சென்று விட்டனர். மற்ற 2 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை கனிமவள தடுப்பு குழுவினர் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story