மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 139 பேர் பலி


மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 139 பேர் பலி
x
தினத்தந்தி 6 Jun 2020 1:35 AM GMT (Updated: 6 Jun 2020 1:35 AM GMT)

மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரே நாளில் 139 பேர் உயிரிழந்தனர்.

மும்பை.

மராட்டிய மாநிலத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த மாதத்தில் இருந்து இங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 436 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை 80 ஆயிரத்து 229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல மாநிலத்தில் மேலும் 139 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து உள்ளனா். 3-வது நாளாக மாநிலத்தில் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 122 பேரும், நேற்று முன்தினம் 123 பேரும் பலியாகி இருந்தனர். நேற்று பலியான 139 பேரில் 54 பேர் மும்பை மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். 30 பேர் தானேயையும், 7 பேர் கல்யாண் டோம்பிவிலியையும், 8 பேர் மாலேகாவையும், 14 பேர் புனேயையும், 5 பேர் ரத்னகிரியையும் சேர்ந்தவர்கள்.

மற்றவர்கள் வசாய் விரார், பிவண்டி, நாசிக், சோலாப்பூர், அவுரங்காபாத் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை மாநிலத்தில் 2 ஆயிரத்து 849 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

35 ஆயிரத்து 156 பேர் குணமாகி உள்ளனர். 42 ஆயிரத்து 224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மாநிலத்தில் 3 ஆயிரத்து 479 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. 5 லட்சத்து 45 ஆயிரத்து 947 பேர் வீடுகளிலும், 30 ஆயிரத்து 291 பேர் முகாம்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மும்பையை பொறுத்தவரை நேற்று புதிதாக 1,150 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்தை தாண்டியது. மும்பையில் இதுவரை 46 ஆயிரத்து 80 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல நகரில் புதிதாக 54 பேர் பலியாகி உள்ளனர். இதனால் நகரில் ஆட்கொல்லி நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 1,519 ஆக அதிகரித்து உள்ளது.

தாராவியில் நேற்று புதிதாக 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,889 ஆக உயர்ந்து உள்ளது. தாராவியில் இதுவரை கொரோனாவுக்கு 71 பேர் பலியாகி உள்ளனர்.

மராட்டியத்தில் மற்ற பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புக்குறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 4,581 (115 பேர் பலி), தானே புறநகர் - 994 (16), நவிமும்பை மாநகராட்சி - 3,165 (80), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 1,612 (34), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 440 (9), பிவண்டி மாநகராட்சி - 241 (8), மிரா பயந்தர் மாநகராட்சி - 844 (30), வசாய் விரார் மாநகராட்சி -1,107 (33), ராய்காட் - 709 (29),

பன்வெல் மாநகராட்சி - 653 (26). மாலேகாவ் மாநகராட்சி - 777 (66). புனே மாநகராட்சி - 7,877 (364), பிம்பிரி சின்ஞ்வட் மாநகராட்சி - 561 (13), சோலாப்பூர் மாநகராட்சி - 1,132 (88), அவுரங்காபாத் மாநகராட்சி - 1,735 (88), நாக்பூர் மாநகராட்சி - 637 (11).

Next Story