பண்ருட்டி அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் பலி


பண்ருட்டி அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 16 Jun 2020 10:30 PM GMT (Updated: 17 Jun 2020 3:28 AM GMT)

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

புதுப்பேட்டை,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தணிகாசலம் மகன் வினோத்குமார் (வயது 27). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை அதே ஊரை சேர்ந்த தனது நண்பர்களான ரஞ்சித்குமார் (26), சங்கர் (45) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் வீரப்பெருமாநல்லூரில் இருந்து எஸ்.ஏரிப்பாளையத்துக்கு புறப்பட்டார். பண்ருட்டி அடுத்த திருவாமூர் பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் வினோத்குமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய ரஞ்சித்குமார், சங்கர் ஆகியோரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார்.

சங்கருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான வினோத்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பண்ருட்டி- மடப்பட்டு சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story