வேலூரில் படம் எடுத்து மிரட்டிய வாலிபர்களின் செல்போனில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் தீக்குளித்த பள்ளி மாணவி - பரபரப்பு வாக்குமூலம்


வேலூரில் படம் எடுத்து மிரட்டிய வாலிபர்களின் செல்போனில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் தீக்குளித்த பள்ளி மாணவி - பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 17 Jun 2020 6:25 AM GMT (Updated: 17 Jun 2020 6:25 AM GMT)

வேலூர் அருகே குளிக்கும் வீடியோவை வைத்து மிரட்டியதால் பள்ளி மாணவி தீக்குளித்தார். இந்த வழக்கில் கைதான வாலிபர்களின் செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தாக அந்த மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

வேலூர்,

வேலூர் பாகாயம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் பென்னாத்தூர் அரசு பள்ளியில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். மாணவி வீட்டில் மேற்கூரை இல்லாத கழிப்பறையில் குளிக்கும் வீடியோவை அதே பகுதியை சேர்ந்த கணபதி என்கிற தாமஸ் (வயது 19), 17 வயது சிறுவன் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேர் மற்றும் பென்னாத்தூரை சேர்ந்த பூனை கண்ணன் என்கிற ஆகாஷ் (22) ஆகியோர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி உள்ளனர். அதனால் மனவேதனை அடைந்த மாணவி கடந்த 14-ந் தேதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அவருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தார். 17 வயது சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 2 பேரும் குடியாத்தம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் வேலூர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு இருதயமேரி நேரில் வாக்குமூலம் பெற்றார். அதனை போலீசார் வீடியோவாக பதிவு செய்தனர்.

அந்த வீடியோவில் மாணவி அளித்த வாக்குமூலம் வருமாறு:-
நான் குளிப்பதை வீடியோ எடுத்த 2 பேர் என் சித்தப்பா செல்போனுக்கு போன் செய்தார்கள். அதனை நான் எடுத்து பேசினேன். அப்போது அவர்கள், உன்னையும், உன் சித்தப்பாவையும் பழிவாங்குவதற்காக ஒரு வீடியோ எடுத்துள்ளோம். அதனை சித்தப்பா செல்போன் வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பி உள்ளோம் என்று தெரிவித்தனர். வாட்ஸ்-அப்பை பார்த்தபோது, நான் குளிக்கும் வீடியோ இருந்தது. அதனை உடனடியாக நான் அழித்து விட்டேன். பின்னர் அந்த செல்போன் எண்ணுக்கு போன் செய்தேன். அப்போது அவர்கள் ரூ.5 ஆயிரம் கேட்டார்கள். நான் கொடுக்கவில்லை.

அதனால் அவர்கள் அந்த வீடியோவை வைத்து மிரட்டி, என்னை வேலூர் கோட்டை அருகே அல்லது ஊர் ஏரிக்கரை கோவில் அருகே தனியாக வரும்படி கூறினார்கள். அதன்படி நான் ஊர் ஏரிக்கரைக்கு சென்றேன். அப்போது அங்கு வந்த 3 பேரில் ஒருத்தனை பிடித்து சத்தம் போட்டேன். அதனால் மற்ற 2 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். பின்னர் பிடிபட்டவனிடம் இருந்த செல்போனை பிடுங்கி பார்த்தேன். அதில், நான் குளிக்கும் வீடியோ மற்றும் எனது பாட்டி உள்பட பல்வேறு பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. அவற்றை அழித்து கொண்டிருந்தபோது எனது தலையில் கல்லால் தாக்கிவிட்டு செல்போனை அந்த நபர் பறித்து சென்றுவிட்டார். அதன்பின்னர் வீட்டிற்கு சென்று மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கைதான 3 பேரிடம் இருந்து 2 ஸ்மார்ட் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் இருந்த வீடியோக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தன. வேலூர் கோர்ட்டில் செல்போன்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. விசாரணைக்காக செல்போன்கள் பெறப்பட்ட பின்னர் அழிக்கப்பட்ட வீடியோக்களை திரும்ப எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின்னரே அவர்கள் எத்தனை பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளனர் என்று தெரிய வரும் என்று தெரிவித்தனர்.

Next Story