ஆசிரியர்கள் மூலம் இலவச அரிசி வழங்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை


ஆசிரியர்கள் மூலம் இலவச அரிசி வழங்க எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தை ரேஷன் கடை ஊழியர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 23 Jun 2020 4:18 AM GMT (Updated: 23 Jun 2020 4:18 AM GMT)

ஆசிரியர்கள் மூலம் இலவச அரிசி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை ரேஷன்கடை ஊழியர்கள் முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் ரேஷன் கடைகளில் 650-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 32 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு வழங்கிய இலவச அரிசியை ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யாமல் மற்ற அரசுத்துறை அதிகாரிகள் மூலம் வீடுவீடாக வழங்கப்பட்டது.

இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவர்களை அழைத்து அமைச்சர் கந்தசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். மஞ்சள் நிற ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசி, ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனால் கடந்த 8-ந்தேதி முதல் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டது.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் மஞ்சள் நிற ரேஷன் கார்டுக்கு இலவச அரிசி வழங்கும் பணி, ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று காலை வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கலெக்டர் அருண், பேச்சுவார்த்தை நடத்தி, இலவச அரிசி வினியோகத்துக்கான கோப்பு குடிமைப்பொருள் வழங்கல் துறையில் உள்ளது.

எனவே அதன் இயக்குனரை சந்தித்து பேசுங்கள் என்று தெரிவித்தார். உடனே அங்கிருந்து சென்ற ரேஷன் கடை ஊழியர்கள் குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவனை சந்தித்து முறையிட்டனர். அவர், இது தொடர்பாக துறை செயலாளர் மற்றும் அமைச்சரிடம் பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story