சேலத்தில் கட்டிட தொழிலாளியை கொன்று புதைத்தது எப்படி? கைதான மனைவி, கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்


சேலத்தில் கட்டிட தொழிலாளியை கொன்று புதைத்தது எப்படி? கைதான மனைவி, கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 26 Jun 2020 1:05 AM GMT (Updated: 26 Jun 2020 1:05 AM GMT)

சேலத்தில் கட்டிட தொழிலாளியை கொன்று புதைத்தது எப்படி? என்பது குறித்து அவரது மனைவி, கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சூரமங்கலம்,

சேலம் சிவதாபுரம் அருகே உள்ள செஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கொடி (37). இவர்களுக்கு பவித்ரா என்ற மகளும், தமிழரசன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் பூங்கொடிக்கும், சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (34) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து பூங்கொடி கணவருடன் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பூங்கொடி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மீண்டும் கணவருடன் சேர்ந்து வசித்து வந்தார். இதனிடையே கடந்த 8-ந் தேதி முதல் சேட்டுவை காணவில்லை. 16-ந் தேதி முதல் குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு பூங்கொடியும் திடீரென மாயமானார்.

கொன்று புதைப்பு

இதுகுறித்து சேட்டுவின் தம்பி ராஜேந்திரன் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நேற்று முன்தினம் போலீசார் சேட்டுவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டின் பின்புற பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த ஒரு இடத்தை போலீசார் தோண்டிய போது அதற்குள் சேட்டுவை கொன்று புதைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று தாசில்தார் பிரகாஷ் முன்னிலையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதை பார்ப்பதற்காக அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பின்னர் அங்கேயே சேட்டுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதனிடையே தலைமறைவாக இருந்த பூங்கொடி மற்றும் அவரது கள்ளக்காதலன் புருஷோத்தமன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

கழுத்தை இறுக்கி கொன்றனர்

கடந்த 10 ஆண்டுகளாக பூங்கொடி கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்பு அவர் குழந்தைகளின் நலன் கருதி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடிக்கடி வீட்டுக்கு குடித்துவிட்டு வந்த சேட்டு, மனைவியிடம் இவ்வளவு நாள் அவனோட வாழ்ந்துவிட்டு தற்போது ஏன் இங்கு வந்தாய்? என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பூங்கொடி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

கடந்த 7-ந் தேதி குழந்தைகள் உறவினர் ஒருவருடைய திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அன்றைய தினம் இரவு பூங்கொடி வீட்டுக்கு கள்ளக்காதலன் புருஷோத்தமன் வந்தார். பின்னர் அவர்கள் சேட்டுவை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இதையடுத்து அவரது உடலை வீட்டின் பின்பகுதியில் புதைத்தனர். மேலும் குழந்தைகள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் சேட்டு வெளியூருக்கு வேலைக்கு சென்று விட்டதாக கூறி பூங்கொடி நாடகமாடி உள்ளார். இருப்பினும் குழந்தைகள் அடிக்கடி தந்தை பற்றி கேட்டதால் பயந்துபோன அவர் கள்ளக்காதலனுடன் மாயமானார். இதையடுத்து பழைய சூரமங்கலம் பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள் சிக்கினர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மருத்துவ பரிசோதனை

மேலும் அவர்களை சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கைதானவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவர்களை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Next Story