வீட்டை விட்டு 2 கி.மீ. தூரத்துக்கு மேல் வந்தால் வாகனங்கள் பறிமுதல் - மும்பை போலீசார் எச்சரிக்கை


வீட்டை விட்டு 2 கி.மீ. தூரத்துக்கு மேல் வந்தால் வாகனங்கள் பறிமுதல் - மும்பை போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 29 Jun 2020 12:00 AM GMT (Updated: 28 Jun 2020 10:48 PM GMT)

பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து 2 கி.மீ. தூரத்துக்கு மேல் வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மும்பை போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மும்பை,

நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஊரடங்கில் உள்ள தளர்வுகளை பயன்படுத்தி தற்போது பொதுமக்களும் வெளியில் சாதாரணமாக நடமாட தொடங்கி உள்ளனர். இது நோய் தொற்று மேலும் வேகமாக பரவ காரணமாகி உள்ளது.

இந்தநிலையில் மும்பை போலீசார் பொதுமக்கள் வீடுகளை விட்டு 2 கி.மீ. தாண்டி எங்கும் செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் பொது மக்களுக்கு வழிகாட்டுதல்களையும் கூறியுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

2 கி.மீ. தூரத்தை தாண்ட கூடாது

* அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற ேவலைகளுக்காக பொதுமக்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் வெளியே செல்லும் போது முககவசம் அணிவது கட்டாயம்.

* மார்க்கெட், சலூன், கடைகள், நடைபயிற்சி போன்ற தேவைகளுக்கு பொதுமக்கள் வீட்டில் இருந்து 2 கி.மீ.க்குள் தான் பயணம் செய்ய வேண்டும். வீட்டில் இருந்து 2 கி.மீ. தாண்டி வரக்கூடாது.

* அலுவலகம், மருத்துவ தேைவகளுக்கு மட்டுமே பொது மக்கள் வீட்டில் இருந்து 2 கி.மீ. தாண்டி செல்ல முடியும். இதை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

* அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்காகவும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது மக்கள் வெளியே வர கூடாது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள கேட்டு கொள்கிறோம். தேவையின்றி வெளியே யாரும் வரவேண்டாம். கொரோனாவை வீழ்த்துவது நம் அனைவரின் கைகளிலும் உள்ளது. சுய பாதுகாப்பு, சமூக இடைவெளி, அரசு வழிகாட்டுதல்களை எல்லா நேரங்களிலும் பின்பற்றினால் தான் நாம் இதை சாதிக்க முடியும்’’ என்றார்.

Next Story