முழு ஊரடங்கு: ராமநாதபுரத்தில் மக்கள் முழு ஒத்துழைப்பு


முழு ஊரடங்கு: ராமநாதபுரத்தில் மக்கள் முழு ஒத்துழைப்பு
x
தினத்தந்தி 6 July 2020 2:57 AM GMT (Updated: 6 July 2020 2:57 AM GMT)

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நேற்று அறிவிக்கப்பட்டிருந்த ஒருநாள் பொது ஊரடங்கு மக்களின் முழு ஒத்துழைப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஒரு நாள் பொது முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு அழைப்பை ஏற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் வெளியில் வராமல் வீடுகளுக்குள் இருந்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பஸ் நிலைய பகுதி, பாரதிநகர், பழைய பஸ் நிலைய பகுதி, சாலைத்தெரு, அரசு ஆஸ்பத்திரி ரோடு, அரண்மனை, வண்டிக்காரத்தெரு, கேணிக்கரை, சிகில்ராஜவீதி, யானைக்கல் வீதி, சின்னக்கடை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பஸ்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்ததால் பஸ்நிலைய பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. காலை நேரத்தில் பால் வினியோக கடைகள் மட்டும் திறக்கப்பட்டு பின்னர் அடைக்கப்பட்டது. மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டதால் அனைத்து பகுதிகளும் முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய பணிகளுக்காக கூட வெளியில் செல்லாமல் மக்கள் தவிர்த்து வந்தனர்.

ஒட்டுமொத்தமாக பாரபட்சமின்றி அனைத்து பொதுமக்களுக்கும் அரசின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்ததால் ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி மாவட்டமே வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கு சமயத்தில் வெளியில் தேவையின்றி சுற்றித்திரிவதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் முகக்கவசம் அணிந்தபடி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

முழு ஒத்துழைப்பு

இதுதவிர கூடுதல் போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்தே இல்லாத சாலைகளில் வழக்கம் போல பணிகளில் ஈடுபட்டனர். இதுநாள் வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சமயங்களை போன்று அல்லாமல் நேற்று வழக்கத்தை விட மக்கள் அதிகஅளவில் ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெளியில் வராமல் வீடுகளில் இருந்ததால் சாலைகளில் கால்நடைகளை தவிர மக்கள் நடமாட்டமே கண்ணில்படவில்லை. ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசின் நடவடிக்கைக்கு மக்களின் மிகப்பெரிய ஒத்துழைப்பாகவே நேற்றைய ராமநாதபுரம் மாவட்ட சாலைகள் காட்சியளித்தன.

Next Story