கொரோனா பரிசோதனைக்கு செல்வதற்காக லாரியை திருடிய வாலிபர்


கொரோனா பரிசோதனைக்கு செல்வதற்காக லாரியை திருடிய வாலிபர்
x
தினத்தந்தி 16 July 2020 3:36 AM GMT (Updated: 16 July 2020 3:36 AM GMT)

சென்னையில் இருந்து வந்ததால் உறவினர் வீட்டுக்குவர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் லாரியை திருடி கொரோனா பரிசோதனைக்கு சென்றுள்ளார்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உப்புக்குள தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். கடந்த 3-ந் தேதி திருத்துறைப்பூண்டி-வேதை சாலையில் உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இவருடைய லாரி திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், ராஜேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

திருட்டு போன லாரி மறுநாள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் லாரியை திருடி அங்கு நிறுத்தி விட்டு சென்ற நபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலைய பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

உறவினர் வீட்டில் அனுமதி மறுப்பு

விசாரணையில் அவர், கூத்தாநல்லூர் அருகே உள்ள புளியங்குடி நடுத்தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் அசோக்(வயது 25) என்பதும், லாரியை திருடி மருத்துவமனை அருகே நிறுத்தியவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொரோனா பரிசோதனைக்கு செல்வதற்காக அவர் லாரியை திருடியது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வரும் அசோக், ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வர விரும்பினார். சரக்கு லாரிகள் மூலமாக திருத்துறைப்பூண்டிக்கு வந்த அவர், திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல முயன்றபோது, கொரோனா அச்சம் காரணமாக அவரை உறவினர்கள் தங்களுடைய வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

கொரோனா பரிசோதனை

மேலும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளும்படி உறவினர்கள் அவரை அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து அவர் சம்பவத்தன்று நள்ளிரவு 12 மணி அளவில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.

அதற்கு அங்கு இருந்த டாக்டர்கள், காலையில் தான் பரிசோதனை நடைபெறும் என கூறி உள்ளனர். உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுங்கள் என கூறி உள்ளனர். பொது போக்குவரத்து வசதி ஏதும் இல்லாத நிலையில் அசோக், லாரி உரிமையாளர் சங்க கட்டிடம் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார். பின்னர் லாரியை மருத்துவமனை வாசலிலேயே நிறுத்தி விட்டு தப்பி சென்றார். கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாக அசோக் லாரியை திருடியது தெரிய வந்தது.

இவ்வாறு போலீசார் கூறினர். கைதாகி உள்ள அசோக்கிற்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர் போலீசார் அவரை நாகை கிளை சிறையில் அடைத்தனர். 

Next Story