பிளஸ்-2 தேர்வு முடிவு: திருவள்ளூர் மாவட்டத்தில் 91.16 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி


பிளஸ்-2 தேர்வு முடிவு: திருவள்ளூர் மாவட்டத்தில் 91.16 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
x
தினத்தந்தி 17 July 2020 12:44 AM GMT (Updated: 17 July 2020 12:44 AM GMT)

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதில் திருவள்ளூர் மாவட்டத்தில் 91.16 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த மார்ச் மாதத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வை திருவள்ளூர் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 635 மாணவர்கள், 21 ஆயிரத்து 469 மாணவிகள் என மொத்தம் 40 ஆயிரத்து 104 பேர் எழுதினார்கள்.

அவர்களில் 16 ஆயிரத்து 367 மாணவர்களும், 20 ஆயிரத்து 192 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.83 சதவீதமாகும். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.5 சதவீதமாகும். அதாவது மாணவ-மாணவிகளின் மொத்த தேர்ச்சி விகிதம் 91.16 சதவீதமாகும். கடந்த 2019-ம் ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு 89.49 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை காட்டிலும் இந்த ஆண்டு 1.67 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 104 அரசு பள்ளிகளில் 13 ஆயிரத்து 133 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் 10 ஆயிரத்து 782 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் 79.9 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதேபோல மாற்றுத்திறனாளிகளில் கண் பார்வையற்றவர் 51 பேர், காதுகேளாதோர் 12 பேர், ஊனமுற்றோர் மற்றும் இதர வகையினர் 68 பேர் என மொத்தம் 131 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 117 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புழல் சிறையில் 16 பேர் தேர்வு எழுதி அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் கடந்த ஆண்டு 25-வது இடத்தில் இருந்து தற்போது 22-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திருவரசு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story