கந்த சஷ்டி கவச விவகாரம், பெரியார் சிலை அவமதித்தல் போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


கந்த சஷ்டி கவச விவகாரம், பெரியார் சிலை அவமதித்தல் போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 19 July 2020 3:38 AM GMT (Updated: 19 July 2020 3:38 AM GMT)

கந்த சஷ்டி கவச விவகாரம், பெரியார் சிலை அவமதித்தல் போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

குடவாசல்,

திருவாரூர் மாவட்டம் சித்தாடி மற்றும் பருத்தியூர் ஆகிய கிராமங்களில் ரூ.3 கோடி மதிப்பில் புதிய பாலங்களை அமைச்சர் காமராஜ் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டம் முழுவதும் 2009 சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் எடுக்கப்பட்டது இதுவரை 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் செயல் ஒரு மோசமான போக்கு. மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் செயல்படக்கூடாது. பெரியார் சிலையை அவமதிப்பதும் தவறு. இதுபோன்ற அநாகரிக செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மருத்துவமனைகள்

அமைச்சர்கள் உள்ளிட்ட உயர் பொறுப்பில் உள்ளவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். அதனால் மற்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனியார் மருத்துவமனையில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிகிச்சை பெறுகிறார்கள்.

அதேநேரத்தில் தனியார் மருத்துவமனைகளை விட அரசு மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளன. உயர் சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story