மராட்டியத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 4-வது மந்திரி: மும்பை மலாடு மேற்கு தொகுதியை சேர்ந்தவர் மந்திரி அஸ்லம் சேக்கிற்கு கொரோனா - வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை


மராட்டியத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட 4-வது மந்திரி: மும்பை மலாடு மேற்கு தொகுதியை சேர்ந்தவர் மந்திரி அஸ்லம் சேக்கிற்கு கொரோனா - வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை
x
தினத்தந்தி 20 July 2020 11:15 PM GMT (Updated: 20 July 2020 10:10 PM GMT)

மும்பை மலாடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், மந்திரியுமான அஸ்லம் சேக்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் 4-வது மந்திரி இவர் ஆவார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தை ஆட்கொல்லி கொரோனா வைரஸ் புரட்டி போட்டு உள்ளது.

நாட்டிலேயே அதிக பாதிப்பை சந்தித்து வரும் மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதேபோல தலைநகர் மும்பையில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து உள்ளது. இங்கு சாதாரண மக்கள் மட்டும் இன்றி அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களையும் தொற்று அதிகளவில் தாக்கி வருகிறது.

மாநிலத்தில் ஏற்கனவே வீட்டு வசதித்துறை மந்திரி ஜிதேந்திர அவாத் (தேசியவாத காங்கிரஸ்), பொதுப்பணி துறை மந்திரி அசோக் சவான் (காங்கிரஸ்), சமூகநீதி துறை மந்திரி தனஞ்செய் முண்டே (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தனர்.

இந்தநிலையில் காங்கிரசை சேர்ந்த மாநில ஜவுளி, துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை மந்திரி அஸ்லம் சேக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் கூட்டணியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4-வது மந்திரி அஸ்லம் சேக் ஆவார்.

இவர் மும்பை மலாடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் மும்பை நகர மாவட்ட பொறுப்பு மந்திரியாகவும் பதவி வகிக்கிறார்.

மந்திரி அஸ்லம் சேக் கடந்த சில நாட்களுக்கு முன் மலாடு மற்றும் போர்ட் பகுதிகளில் நடந்த கட்டிட விபத்துகளை நோில் சென்று பார்வையிட்டார். ஆனாலும் அவருக்கு யார் மூலம் தொற்று ஏற்பட்டது என்று தெரியவில்லை.

இந்தநிலையில் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில், “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவுமில்லை. என்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். வீட்டில் இருந்தபடி மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன்” என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோல சமீபத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அபிமன்யு பவார், முக்தா திலக் மற்றும் புனே மேயர் முரளிதர் மாகோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தானே, மிரா பயந்தரில் காங்கிரஸ், சிவசேனாவை சேர்ந்த தலா ஒரு கவுன்சிலர்கள் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர்.

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் நடிகை ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story