வேலூர் காந்திரோட்டில் தடையை மீறி இருபுறமும் கடைகள் திறப்பு


வேலூர் காந்திரோட்டில் தடையை மீறி இருபுறமும் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 28 July 2020 12:16 AM GMT (Updated: 28 July 2020 12:16 AM GMT)

வேலூர் காந்திரோட்டில் தடையை மீறி இருபுறமும் கடைகள் திறப்பு.

வேலூர்,

வேலூர் நகரின் முக்கிய வியாபார மையமான மண்டித்தெரு, லாங்குபஜார், நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கடை வியாபாரிகள், ஊழியர்களுக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது. அதைத்தொடர்ந்து முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டன. காய்கறி கடைகள் வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டன.

மண்டித்தெரு, லாங்குபஜார், சுண்ணாம்புகார தெரு, காந்திரோட்டில் உள்ள கடைகள் பல நாட்களாக மூடப்பட்டிருந்தன. வாழ்வாதாரம் இன்றி தவிப்பதால் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன்பேரில் கலெக்டர் சண்முகசுந்தரம் அந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மண்டித்தெரு, லாங்குபஜார், காந்திரோடு, மெயின்பஜார், சுண்ணாம்புகாரத்தெரு உள்ளிட்ட 12 பகுதிகளில் உள்ள கடைகளை சுழற்சி முறையில் திறக்க கலெக்டர் அனுமதி அளித்தார். அதாவது ஒருநாளைக்கு ஒருபுறத்தில் உள்ள கடைகளும், மறுநாள் மற்றொரு புறத்தில் உள்ள கடைகளையும் திறக்கலாம் என்று தெரிவித்தார்.

ஆனால் வேலூர் காந்திரோட்டில் கடந்த சில நாட்களாக இருபுறத்திலும் உள்ள கடைகளும் திறக்கப்படுகின்றன. அதனால் அங்கு பொதுமக்களின் கூட்டம், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தடையை மீறி வியாபாரிகள் மற்றொரு புறத்தில் உள்ள கடைகளை திறந்து விற்பனை செய்கிறார்கள். அதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி குவிகிறார்கள். அதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. தடையை மீறி திறக்கப்படும் கடைகள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story