ஊத்துக்கோட்டை அருகே ஆந்திராவுக்கு மது பாட்டில்கள் கடத்த முயற்சி; 4 பேர் கைது கார் பறிமுதல்


ஊத்துக்கோட்டை அருகே ஆந்திராவுக்கு மது பாட்டில்கள் கடத்த முயற்சி; 4 பேர் கைது கார் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Aug 2020 12:46 AM GMT (Updated: 10 Aug 2020 12:46 AM GMT)

ஊத்துக்கோட்டை அருகே காரில் ஆந்திராவுக்கு மது பாட்டில்கள் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 182 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் தலைமையில் போலீசார் ஊத்துக்கோட்டை அடுத்து உள்ள செஞ்சியகரம் காட்டு பகுதியில் நேற்று மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வேகமாக நிற்காமல் சென்ற காரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் காரில் சோதனை செய்தபோது, அதில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 182 மதுபாட்டில்கள் இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

இதையடுத்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த காரிலிருந்து தப்பி ஓட முயன்ற ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 34), ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த திருச்சானூரை சேர்ந்த சங்கர் (35), வெங்கடேசன் (60), ஸ்ரீஹரி (33) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கி செஞ்சியகரம் காட்டு பகுதி வழியாக ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. அவர்களிடமிருந்து காரையும் பறிமுதல் செய்தனர்.


Next Story