கர்நாடகத்தில் பசுவதை தடுப்பு சட்டம்? மந்திரி பிரபு சவுகான் பேட்டி


கர்நாடகத்தில் பசுவதை தடுப்பு சட்டம்? மந்திரி பிரபு சவுகான் பேட்டி
x
தினத்தந்தி 20 Aug 2020 11:06 PM GMT (Updated: 20 Aug 2020 11:06 PM GMT)

கர்நாடகத்தில் பசுக்களை பாதுகாக்க பசுவதை தடுப்பு சட்டத்தை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளதாக மந்திரி பிரபு சவுகான் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் பசுக்களை பாதுகாக்க பசு சஞ்சீவினி திட்டத்தின் கீழ் சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனத்தை பெங்களூரு விதானசவுதாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடைத் துறை மந்திரி பிரபு சவுகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மந்திரி பிரபு சவுகான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் முதல் முறையாக விவசாயிகளின் வீட்டுக்கு வரும் வகையில் பசு சஞ்சீவினி திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்துள்ளார். கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு, அதற்காக இலவச தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. காயம் அடையும், நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து மருத்துவ கருவிகளும் பசு சஞ்சீவினி ஆம்புலன்சில் உள்ளன. அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான வசதிகளும் உள்ளன.

தற்போது 15 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பசுக்களை பாதுகாக்க பசுவதை தடுப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்து வருகிறது. சட்டசபை கூட்டத்தொடரின் போது விவாதித்து, அந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கும் அரசு தயாராக உள்ளது.

மந்திரிசபை விரிவாக்கம் அல்லது மாற்றியமைப்பது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் பா.ஜனதா மேலிட தலைவர்கள் தான் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். மந்திரிசபையில் இருந்து என்னை நீக்குவது குறித்து தகவல் வெளியாகி இருப்பது பற்றி எனக்கு எந்த தகவலும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story