தோகைமலை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல் ; 2 பேர் பலி


தோகைமலை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல் ; 2 பேர் பலி
x
தினத்தந்தி 29 Aug 2020 11:07 PM GMT (Updated: 29 Aug 2020 11:07 PM GMT)

தோகைமலை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் இறந்தனர்.

தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை நெடுஞ்சாலையில் குண்னாகவுண்டம்பட்டியில் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு திருச்சி மாவட்டம் எட்டரை கோப்பு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (வயது 37) பணியாற்றி வந்தார். நேற்று மதியம் 2.30 மணியளவில் ராஜசேகர் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலையாக தோகைமலை சென்று விட்டு, பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

கழுகூர் பஸ் நிலையம் அருகே வந்தபோது, கருர் மாவட்டம் போத்துராவுத் தன்பட்டி ஊராட்சி, குள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீசியனான பழனிசாமி (50) என்பவர் ‘லிப்ட்’ கேட்டு ஏறினார். அவர்கள் கழுகூர் அருகே புதூர் பிரிவு சாலையில் வந்தபோது, குளித்தலையில் இருந்து மணப்பாறை நோக்கி வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜசேகர், பழனிசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story