“குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்” டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை


“குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும்” டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 Aug 2020 1:34 AM GMT (Updated: 30 Aug 2020 1:34 AM GMT)

போலீஸ் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடத்தக்கூடாது என்றும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என்றும் போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி எச்சரித்துள்ளார்.

தேனி,

தேனி மாவட்ட போலீஸ் துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் தேனி அன்னஞ்சி விலக்கில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி தலைமை தாங்கினார். தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் வரவேற்றார்.

முகாமில் திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

குண்டர் சட்டம்

நாட்டில் ஏராளமான குற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்பது பாதிக்கப்பட்ட குழந்தைகள் வளர்ந்து திருமணத்துக்கு பின்பும், மரணப் படுக்கையிலும் கூட மனதளவில் கடுமையான வேதனை அளிக்கக்கூடியது. நாட்டை பாதிக்கும் மிகப்பெரிய குற்றமாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பார்க்க வேண்டும். திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் அனைவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள். இந்தியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களில் 3-ல் ஒரு பங்கு இளம் குற்றவாளிகளாக உள்ளனர். எனவே குழந்தை வளர்ப்பில் பெற்றோர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அவர்களோடு தினமும் ஒரு மணி நேரமாவது உரையாட வேண்டும்.

கட்டப்பஞ்சாயத்து கூடாது

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்பட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கட்டப் பஞ்சாயத்து செய்யக்கூடாது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார் வந்தால் உடனடியாக மனு ரசீது வழங்க வேண்டும். தாமதமின்றி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கட்டப்பஞ்சாயத்து செய்தால் சம்பந்தப்பட்டவர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவார்கள்.

இவ்வாறுஅவர் பேசினார்.

முன்னதாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகள் குறித்து சைல்டு லைன் மாவட்ட இயக்குனர் முகமது சேக் இப்ராகிம், ஒருங்கிணைப்பாளர் மஞ்சு ஆகியோர் பேசினர். முகாமில், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சுரேஷ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார், சைல்டு லைன் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் நன்றி கூறினார்.

Next Story