ஆன்லைன் உணவு வினியோகிக்கும் போர்வையில் கேளிக்கை விடுதிகளுக்கு கஞ்சா விற்ற என்ஜினீயர்கள் கைது


ஆன்லைன் உணவு வினியோகிக்கும் போர்வையில் கேளிக்கை விடுதிகளுக்கு கஞ்சா விற்ற என்ஜினீயர்கள் கைது
x
தினத்தந்தி 7 Sep 2020 9:44 PM GMT (Updated: 7 Sep 2020 9:44 PM GMT)

சோழிங்கநல்லூரில் ஆன்லைன் உணவு வினியோகிக்கும் போர்வையில் கேளிக்கை விடுதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்த என்ஜினீயரிங் பட்டதாரிகள் 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆலந்தூர்,

ஆன்-லைன் மூலம் உணவு வினியோகம் செய்யும் ஆட்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, செம்மஞ்சேரி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் ஆட்களை பின்தொடர்ந்து கண்காணித்தனர்.

இதில் தனியார் நிறுவன ஆன்லைன் உணவு வினியோக செய்யும் ஊழியர் விஜய் (வயது 27) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் உள்ள உணவு வினியோகம் செய்வது போல் கஞ்சாவும், சிகரெட்டில் வைத்து உபயோகிக்கும் கஞ்சா ஆயில், சிரஞ்சுகளும் பெட்டியில் வைத்திருந்து விற்பனை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

என்ஜினீயர்கள்

அவரை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், அதே குடியிருப்பில் தங்கியுள்ள திருப்பத்தூரைச் சேர்ந்த புகழ்(26), அவருடைய நண்பர்களான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருண்(27), சென்னை அண்ணாநகரைச்சேர்ந்த நவோதித் (24) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் 3 பேரும் ஒன்றாக தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து முடித்த பட்டதாரி ஆவர். புகழ் மற்றும் நவோதித் வேலையில்லாமல் உள்ளனர். அருண் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக உள்ளார்.

ஆந்திராவில் இருந்து கடத்தல்

இவர்கள் 3 பேரும் விலையுயர்ந்த கார் மூலம் ஆந்திரமாநிலம் நெல்லூர் சென்று கஞ்சா கடத்தி வந்து தனியார் ஆன்லைன் ஊழியர் விஜய் மூலம் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயிலை விற்பனை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அவற்றை வினியோகம் செய்துள்ளது தெரியவந்தாக போலீசார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, 10 மி.லி. அளவுள்ள கஞ்சா ஆயில், 16 சிரஞ்சுகள், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். கைதான 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.

மற்றொரு சம்பவம்

அதேபோல் சென்னை புறநகரில் ஆன்லைன் வாயிலாகவும், செல்போன் மூலமாகவும் கஞ்சா விற்பனை செய்த சிட்லபாக்கம், எம்.சி. நகரைச் சேர்ந்த சரண் ராம்(25), வண்டலூர் தேவேந்திரன் நகரைச் சேர்ந்த ஆலன்(25), விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கட நாகமனோஜ்(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்களான சரண் ராம் மற்றும் ஆலன் இருவரும் செங்கல்பட்டு, மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்ததும், வெங்கட நாகமனோஜ், மயிலாப்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் அதிகாரியாக பணிபுரிந்ததும் தெரிந்தது.

இவர்கள் 3 பேரும் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்ததால் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து, விற்பனை செய்தது தெரிந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார், ஆலன் வீட்டில் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story