திருக்கனூர் அருகே சோகம் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி கட்டுமானப் பணியின்போது சம்பவம்


திருக்கனூர் அருகே சோகம் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி கட்டுமானப் பணியின்போது சம்பவம்
x
தினத்தந்தி 11 Sep 2020 10:15 PM GMT (Updated: 11 Sep 2020 10:15 PM GMT)

திருக்கனூர் அருகே கட்டுமானப் பணியின்போது மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருக்கனூர்,

புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 39). அரசு பள்ளி ஆசிரியர். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நந்த குமார் (33) என்பவர் ஒப்பந்தம் செய்து கட்டுமானப்பணிகளை செய்து வருகிறார். 3 மாடி கட்டிடமாக கட்டப்பட்ட நிலையில் தற்போது 3-வது மாடிக்குச் செல்வதற்காக படிக்கட்டு அமைக்கப்பட்டு வருகிறது.

காட்டேரிக்குப்பம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த செல்வக்குமார் (29), விழுப் புரம் மாவட்டம் ஆயத்தூரை சேர்ந்த நவீன்குமார் (24) மற்றும் தொழிலாளர்கள் இந்த பணியில் நேற்று காலை ஈடுபட்டனர். தரை தளத்தில் இருந்து 3-வது தளத்துக்கு ஜல்லி கற்களை ஏற்றுவதற்காக இரும்பு கயிற்றினால் (ரோப்) ஆன எந்திரம் பயன்படுத்தப்பட்டது.

மின்சாரம் தாக்கி பலி

மதிய உணவுக்காக தொழிலாளர்கள் மாடியில் இருந்து கீழே இறங்கினர். அப்போது இரும்பு ரோப் மூலம் பொருட்களை தரைத் தளத்துக்கு செல்வக்குமார், நவீன்குமார் ஆகியோர் இறக்கினர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் முன்பகுதியில் சென்ற மின்கம்பி மீது இரும்பு ரோப் உரசியது. கண் இமைக்கும் நேரத்தில் செல்வக்குமார், நவீன்குமார் ஆகிய 2 பேரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்த செல்வக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனார்.

மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த நவீன்குமாரை சக தொழிலாளர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

வீட்டு உரிமையாளர் மீது வழக்கு

இதுபற்றி தகவல் அறிந்து காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் மின்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடனடியாக அந்த பகுதியில் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் செல்வக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரான அரசு பள்ளி ஆசிரியர் மகேந்திரன், ஒப்பந்ததாரர் நந்தகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உயிரிழந்த செல்வக்குமாருக்கு பச்சையம்மாள் (24) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. நவீன்குமார் திருமணமாகாதவர் ஆவார்.

கட்டுமானப் பணியின்போது 2 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் காட்டேரிக்குப்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story