பட்டினப்பாக்கம் பகுதியில்தண்ணீர் லாரி மோதி சிறுவன் பலியான வீடியோ வெளியானது -நெஞ்சை பதற வைக்கும் காட்சி


பட்டினப்பாக்கம் பகுதியில்தண்ணீர் லாரி மோதி சிறுவன் பலியான வீடியோ வெளியானது -நெஞ்சை பதற வைக்கும் காட்சி
x
தினத்தந்தி 12 Sep 2020 9:08 PM GMT (Updated: 12 Sep 2020 9:08 PM GMT)

இந்த விபத்து நடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (வயது 35). இவருடைய மகன் பிரனீஷ் லியான் (5). நேற்று முன்தினம் காலை பிரனீஷ் லியான், தனது 4 வயது சகோதரி மற்றும் பாட்டி உமாவுடன் தரமணியில் உள்ள மருத்துவமனைக்கு உறவினரான கோபால் என்பவருடன் ஸ்கூட்டரில் சென்றான். பட்டினப்பாக்கம் எஸ்.சி.பி. சிக்னலில் சென்றபோது தாறுமாறாக ஒடிய தண்ணீர் லாரி இவர்களது ஸ்கூட்டர் மீது மோதியதில் சிறுவன் பிரனீஷ் லியான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 

இதையடுத்து போலீசார், லாரி டிரைவர் சமீரை கைது செய்தனர். இந்த நிலையில் இந்த விபத்து நடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது வைரலாக பரவுகிறது. சிக்னலுக்காக வாகன ஓட்டிகள் காத்துக்கொண்டிருந்தபோது, பின்னால் இருந்து அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, வாகன ஓட்டிகளை இடித்து தள்ளிக்கொண்டு சிக்னல் கம்பத்தின் மீது மோதி நிற்பதும், வாகன ஓட்டிகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டு அலறி அடித்து ஓடுவதுமான காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது.

சென்னையில் பெரும்பாலான தண்ணீர் லாரிகள் வேக கட்டுப்பாடுகளை மீறி தாறுமாறாக ஓடுவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது எனவும், தண்ணீர் லாரிகளை மக்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் குறிப்பிட்ட வேகத்தில் ஓட்டினால் இதுபோன்ற உயிரிழப்புகளும், விபத்துகளும் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


Next Story