“வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு


“வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்” அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
x
தினத்தந்தி 12 Sep 2020 11:22 PM GMT (Updated: 12 Sep 2020 11:22 PM GMT)

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று நெல்லையில் நடந்த ஜெயலலிதா பேரவை உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

நெல்லை,

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு வரவேற்று பேசினார்.

இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செய்தி விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

1½ கோடி தொண்டர்கள்

13 லட்சம் தொண்டர்களுடன் அ.தி.மு.க. இயக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கினார். தற்போது அ.தி.மு.க.வில் 1½ கோடி தொண்டர்கள் உள்ளனர். இருந்தும் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. ஒரு இயக்கத்துக்கு புது ரத்தம் பாய்ச்சினால் தான் உத்வேகத்தோடு செயல்படும். அந்த அடிப்படையில்தான் அ.தி.மு.க.வில் ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, இளைஞர்- இளம்பெண்கள் பாசறை ஆகிய மூன்று சார்பு அணிகளுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. சார்பு அணி நிர்வாகிகளும் அ.தி.மு.க. அமைப்பு தேர்தலில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

தி.மு.க. 8 மாதத்தில் ஒரு கனவு கண்டு கொண்டிருக்கிறது. ஆனால் தி.மு.க. செய்த நில அபகரிப்பு, சட்டம்-ஒழுங்கு சீரழிவு, குடும்ப ஆதிக்கம், மின்சாரமின்றி மக்களை கற்காலத்திற்கு கொண்டு சென்றதை நாட்டு மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை. அதனால்தான் கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் மகத்தான வெற்றியை அளித்தார்கள்.

அ.தி.மு.க. வெற்றி

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் மட்டுமே அரசியல் நடத்துகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரே ஆண்டில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கினார். 11 மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கி உள்ளார். ஆனால் இதையெல்லாம் மு.க.ஸ்டாலின் உணராததால் தான் தி.மு.க. காலாவதி கட்சி ஆகிவிட்டது. அ.தி.மு.க. 8½ கோடி மக்களை பாதுகாக்கும் இயக்கமாக உள்ளது. தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை. எதிர்க்கட்சிகள் மக்கள் மன்றத்திற்கு செல்லாமல் நீதிமன்றத்துக்கு செல்வதை வேலையாக கொண்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி இதயத்தில் ஜெயலலிதா ஆன்மா புகுந்து இருப்பதால் சிறப்பாக திறமையாக செயல்பட்டு வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தெய்வ சக்திகளாக வழி நடத்துகிறார்கள். எனவே வருகிற 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைக்க உள்ளது. அதற்கு கட்சி தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், எம்.எல்.ஏ.க்கள் இன்பதுரை, ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் டென்சிங் சுவாமிதாஸ், பாளையங்கோட்டை ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பணகுடி முன்னாள் பேரூராட்சி தலைவர் லாரன்ஸ், கல்லூர் வேலாயுதம், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், அந்தோணி அமலராஜா, ராஜன் கிருபாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story