வேலூர், ராணிப்பேட்டைக்கு ‘நீட்’ தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி - கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


வேலூர், ராணிப்பேட்டைக்கு ‘நீட்’ தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதி - கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Sep 2020 6:00 AM GMT (Updated: 14 Sep 2020 6:32 AM GMT)

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வேலூர், ராணிப்பேட்டைக்கு ‘நீட்’ தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு சிறப்பு பஸ் வசதியை கலெக்டர் கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் 137 மாணவர்கள், 210 மாணவிகள் என மொத்தம் 347 பேர் ‘நீட்’ தேர்வு எழுதுகிறார்கள். இதில் அரசு பள்ளிகளில் இருந்து 44 மாணவர்களும், 145 மாணவிகளும் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 33 மாணவர்களுக்கும், 72 மாணவிகளுக்கும் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு நேரடியாக தேர்வு எழுத செல்வதற்கு சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சிறப்பு பஸ் வசதிகளை நேற்று காலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக அவர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடம் தேர்வை எதிர் கொள்ள ஆலோசனை மற்றும் வாழ்த்துரை வழங்கி வழியனுப்பி வைத்தார். மேலும் பஸ்சில் செல்லும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் காலை மற்றும் மதிய உணவு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Next Story