விராலிமலை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சிறுவன் பலி தாய்-தந்தை உள்பட 3 பேர் படுகாயம்


விராலிமலை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சிறுவன் பலி தாய்-தந்தை உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Sep 2020 1:05 AM GMT (Updated: 18 Sep 2020 1:05 AM GMT)

விராலிமலை அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் சிறுவன் உயிரிழந்தான். அவனது தாய்-தந்தை உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விராலிமலை,

தூத்துக்குடி மாவட்டம், அசோக் நகரை சேர்ந்த ராஜன் மகன் பினோ டேவிட்(வயது 30). இவர், மனைவி மெர்லின் (30), மகன் ஹேன்சல் (4½), தாய் மாதரசி (56) ஆகியோருடன் ஒரு காரில் தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் ராய்ப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். காரை பினோடேவிட் ஓட்டினார்.

மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள ராமகவுண்டம்பட்டி அருகே கார் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சிறுவன் ஹேன்சல் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தான். மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

மருத்துவமனைக்கு...

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story