நாகை அருகே தீயில் எரிந்து கூரைவீடுகள் நாசம்


நாகை அருகே தீயில் எரிந்து கூரைவீடுகள் நாசம்
x
தினத்தந்தி 21 Sep 2020 1:44 AM GMT (Updated: 21 Sep 2020 1:44 AM GMT)

நாகை அருகே தீயில் எரிந்து 2 கூரைவீடுகள் நாசமடைந்தன.

வேளாங்கண்ணி,

வேளாங்கண்ணி அருகே உள்ள கீழையூர் தையான்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சின்னையன்(வயது75). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது திடீரென அவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வெளியில் வந்து சத்தம் போட்டனர். பின்னர் ஊர் மக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். இதில் வீடு முழுவதும் எரிந்து பொருட்கள் நாசமடைந்தன. இது குறித்து தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

திட்டச்சேரி

திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி குளத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் (40). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவருடைய கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படைவீரர்கள் தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) திலக்பாபு தலைமையில் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கூரை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. இதையடுத்து திட்டச்சேரி கிராம நிர்வாக அதிகாரி செந்தில் பாதிக்கப்பட்ட ஜாகீர் உசேனுக்கு ரூ.5 ஆயிரம் நிதி உதவி, அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.

Next Story