வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை


வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 22 Sep 2020 12:22 AM GMT (Updated: 22 Sep 2020 12:22 AM GMT)

வில்லியனூர் அருகே கணவர் இறந்த சோகத்தில் ஒரே வாரத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வில்லியனூர்,

புதுவை மாநிலம் கதிர்காமம் பகுதியை சேர்ந்தவர் உதயன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவரும், வில்லியனூர் அருகே உள்ள மணவெளியை சேர்ந்த விசித்ரா (21) என்பவரும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் முத்தியால்பேட்டையில் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 13-ந் தேதி உதயன் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து விசித்ராவை அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். உயிருக்கு உயிராக காதலித்த கணவர் இறந்த சோகத்தில் விசித்ரா அழுதபடியே இருந்துள்ளார். மேலும் சரியாக சாப்பிடாமல், யாரிடமும் பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள ஒரு அறையில் விசித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து, விசித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து விசித்ராவின் தந்தை தாஸ் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

கணவர் இறந்த ஒரே வாரத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story