வீட்டை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு


வீட்டை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
x

வீட்டை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் திடீரென்று எழுந்து ஓடிவந்து கேனில் இருந்த மண்எண்ணெயை தலையில் ஊற்றியவாறு ‘வீட்டை மீட்டு தாருங்கள்‘ என்ற அலறியபடி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து, அந்த பெண் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பறித்து, அவரை காப்பாற்றினர். பின்னர் அந்த பெண்ணை தண்ணீரில் குளிக்க வைத்த போலீசார், எதற்காக அவர் தீக்குளிக்க முயன்றார் என்பது குறித்து விசாரித்தனர்.

விசாரணையில், அந்த பெண் குன்னம் தாலுகா லெப்பைக்குடிக்காடு பிலால் தெருவை சேர்ந்த ஹாஜிமுகமதுவின் மகள் ஷபின்தாஜ் (வயது 39) என்பது தெரியவந்தது. கோழிக்கறி கடை வியாபாரத்திற்காக அதே பகுதியில் நாட்டாமை நகரில் உள்ள அவரது தாய் ரஷியா பேகத்தின் சொந்த வீட்டை அடமானமாக வைத்து பலரிடம் பணத்தை கடனாக பெற்றும், பின்னர் மீண்டும் அவர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்தியும் வீட்டை மீட்டு வந்துள்ளனர்.

வீட்டை அபகரிக்க முயற்சி

இந்நிலையில் வட்டியையும், அசலையும் திரும்ப கொடுக்கும் போது வீட்டை மீட்டு கொள்ளலாம் என்று கடந்த 2008-ம் ஆண்டு பெண்ணக்கோணத்தை சேர்ந்த ஒருவருக்கு, ரஷியாபேகம் வீட்டை எழுதி கொடுத்து ரூ.10 லட்சம் கடனாக பெற்றுள்ளார். பின்னர் அந்த கடனுக்கு வட்டி பணத்தை சரியாக கட்டி வந்த நிலையில் ரஷியா பேகம் 2010-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

தற்போது ஷபின்தாஜ் அசலையும், வட்டி தொகையையும் செலுத்தி விடுகிறோம், வீட்டை தாருங்கள் என்று கூறியும், அந்த நபர் பணத்தை வாங்காமல் தற்போது ரூ.1 கோடிக்கு வீடு போகும் என்று கூறி, அவர் ஷபின்தாஜை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டியுள்ளார். எனவே வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுத்து, வீட்டை மீட்டு தர வேண்டும் என்பதற்காக ஷபின்தாஜ் தீக்குளிக்க முயன்றது, விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் ஷபின்தாஜ் இது தொடர்பான மனுவை புகார் பெட்டியில் போட்டு விட்டு சென்றார். கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story