கொரோனாவால் இறந்தவரின் உடலை ஒப்படைக்க மறுப்பு மருத்துவமனைக்கு பணம் செலுத்த பிச்சை எடுத்து உறவினர்கள் போராட்டம் விஜயாப்புராவில் பரபரப்பு


கொரோனாவால் இறந்தவரின் உடலை ஒப்படைக்க மறுப்பு மருத்துவமனைக்கு பணம் செலுத்த பிச்சை எடுத்து உறவினர்கள் போராட்டம் விஜயாப்புராவில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Sep 2020 10:24 PM GMT (Updated: 23 Sep 2020 10:24 PM GMT)

விஜயாப்புராவில் ரூ.3 லட்சம் கேட்டு கொரோனாவால் இறந்தவரின் உடலை ஒப்படைக்க தனியார் மருத்துவமனை மறுத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சாலையில் அமர்ந்து பிச்சை எடுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜயாப்புரா,

விஜயாப்புரா டவுனை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 18 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக விஜயாப்புரா டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால், மருத்துவமனையில் அந்த நபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் சிகிச்சை கட்டணமாக அவரது குடும்பத்தினர் ரூ.4 லட்சத்து 87 ஆயிரம் வரை கட்டியதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அந்த நபருக்கு திடீரென மூச்சுத்திணறல் அதிகரித்தது. இதனால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அந்த நபர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இதுபற்றி இறந்தவரின் மனைவிக்கும், உறவினர்களுக்கும் டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் உடலை கொடுக்க கூடுதலாக ரூ.3 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது.

ஆனால் இறந்து போனவரின் மனைவி தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறினார். மேலும் தனது கணவரின் உடலை கொடுத்து விடும்படி அவர் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கெஞ்சி கேட்டு உள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் ரூ.3 லட்சம் கேட்டு உடலை கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து தனியார் மருத்துவமனை முன்பு இறந்தவரின் மனைவி, மகள், உறவினர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். அப்போது மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த நிலையில் இறந்தவரின் உடலை பெற பணம் செலுத்த மனைவியும், உறவினர்களும் நடுரோட்டில் துண்டை விரித்து போட்டு பிச்சை எடுத்தனர். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் அந்த துண்டில் பணத்தை போட்டு விட்டு சென்றனர்.

இதுபற்றி அறிந்ததும் விஜயாப்புரா டவுன் போலீசார் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் பேசி கொரோனாவுக்கு இறந்தவரின் உடலை கொடுக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து உடலை பெற்று கொண்டு மனைவியும், உறவினர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story