படப்பை அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் பலி


படப்பை அருகே ஏரியில் மூழ்கி டிரைவர் பலி
x
தினத்தந்தி 5 Oct 2020 11:17 PM GMT (Updated: 5 Oct 2020 11:17 PM GMT)

படப்பை அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற டிரைவர் ஏரியில் மூழ்கி பலியானார்.

படப்பை,

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 46). இவர் வரதராஜபுரம் பகுதிகளில் உள்ள இரும்பு கடைகளில் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவருடன் பணியாற்றிவரும் நண்பர்களான சரவணகுமார்(22) நூர், (50) ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் படப்பை அருகே மணிமங்கலம் பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர்.

இதையடுத்து ஏரியில் குளித்து கொண்டிருந்த 3 பேரில், சரவணகுமார், நூர், ஆகிய இரண்டு பேரும் கரைக்கு திரும்பி வந்த நிலையில், கோவிந்தராஜ் மட்டும் மாயமானதாக கூறப்படுகிறது.

ஆண் பிணம்

இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பெரிய ஏரியில் நேற்று ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக மணிமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் ஏரியில் இறந்து மிதந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். பின்னர் போலீசார் விசாரணை செய்ததில், ஏரியில் மூழ்கி இறந்த நபர் கோவிந்தராஜ் என தெரியவந்துள்ளது. பின்னர் இறந்த உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story