ஊரடங்கில் வெளியே சுற்றியவர்களிடம் இருந்து பறிமுதல்: போலீஸ் நிலையங்களில் குவிந்து கிடக்கும் வாகனங்கள்


ஊரடங்கில் வெளியே சுற்றியவர்களிடம் இருந்து பறிமுதல்: போலீஸ் நிலையங்களில் குவிந்து கிடக்கும் வாகனங்கள்
x
தினத்தந்தி 11 Oct 2020 10:00 PM GMT (Updated: 11 Oct 2020 10:00 PM GMT)

கர்நாடகத்தில் ஊரடங்கில் வெளியே சுற்றியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்டு செல்ல, உரிமையாளர்கள் வராததால் வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் குவிந்து கிடக்கின்றன.

பெங்களூரு,

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் தோன்றியது என்று கூறப்பட்டாலும், இந்தியாவில் அதன் தாக்கம் இந்த ஆண்டு இறுதியில் தான் உணரப்பட்டது. ஆரம்பத்தில் குறைந்த நபர்களே கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்தியா பறந்து விரிந்த நாடு என்பதால், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வேகமாக பரவ ஆரம்பித்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முதற்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பொது போக்குவரத்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களும் தடை விதிக்கப்பட்டன. ஊரடங்கின் போது தேவையின்றி வாகனங்களில் சுற்றிதிரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்த மாநில அரசுகள், தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்து கொண்டன.

இதுபோல மத்திய அரசு அமல்படுத்திய முதற்கட்ட ஊரடங்கு கர்நாடகத்தில் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இரவு, பகல் பாராமல் போலீசார் பணியில் ஈடுபட்டனர். அப்போது தகுந்த காரணம் இன்றி ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகளிலும் ஏராளமான வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததும் அதனை திரும்பி தரும்படி உரிமையாளர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுத காட்சிகளும் அரங்கேறின.

வாகனங்கள் பறிமுதல்

குறிப்பாக கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் போலீசார் தங்களது பிடியை இறுக்கினர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களின் வாகனங்களை தயவுதாட்சணையின்றி போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். இதுபோல பெங்களூரு புறநகர் மாவட்டத்திலும் போலீசார் கண்கொத்தி பாம்பாக பணி செய்தனர். பெங்களூரு புறநகர் மாவட்டம் மாதநாயக்கனஹள்ளி போலீசார் ஊரடங்கின் போது தேவையின்றி வெளியே சுற்றிய 500-க்கும் மேற்பட்டவர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் தற்போது போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அந்த இருசக்கர வாகனங்களை மீட்டு செல்ல தற்போது உரிமையாளர்கள் வருவது இல்லை.

அதாவது பெங்களூரு, பெங்களூரு புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், தொழிற்பேட்டைகளில் வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்தனர். இதனால் அவர்கள் பெங்களூரு, பெங்களூரு புறநகர் பகுதிகளில் தங்களது குடும்பத்தினருடன் தங்கி இருந்தனர். ஊரடங்கால் வேலை இழந்ததும் ஏராளமானோர் வீடுகளை காலி செய்து விட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அப்படியே போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

ஏலம் விட வாய்ப்பு

இதுபோல ஆட்டோக்களும், 4 சக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டு உள்ளன. மாதநாயக்கனஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமின்றி தவித்து வருகின்றனர். மேலும் வாகனங்கள் மீது செடி, கொடிகள் படர்ந்து காணப்படுவதால் அதில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷசந்துகள் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் மாதநாயக்கனஹள்ளி போலீஸ் நிலையம் அருகே வசித்து வருபவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஒரு போலீஸ் நிலையத்திலேயே 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதுபோல மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன. அந்த வாகனங்கள் மழை, வெயிலில் பாழடைந்து வருகின்றன. இதில் சில வாகனங்களின் உரிமையாளர்கள் யார் என்றே போலீசாருக்கு தெரியவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மீட்டு செல்ல வர வேண்டும் உரிமையாளர்களுக்கு, அனைத்து மாவட்ட போலீசாரும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். வாகனங்களை உரிமையாளர்கள் மீட்க வராத பட்சத்தில், வாகனங்களை போலீசார் ஏலத்தில் விடவும் வாய்ப்பு உள்ளது.

Next Story