சேலத்தில் உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சாவு இறப்பு சான்றிதழ் வழங்கிய டாக்டர் மீது நடவடிக்கை?


சேலத்தில் உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சாவு இறப்பு சான்றிதழ் வழங்கிய டாக்டர் மீது நடவடிக்கை?
x
தினத்தந்தி 17 Oct 2020 5:46 AM GMT (Updated: 17 Oct 2020 5:46 AM GMT)

சேலத்தில் உயிருடன் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் உயிருடன் இருக்கும் போதே இறப்பு சான்றிதழ் வழங்கிய டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

சேலம்,

சேலம் கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சரவணன் (வயது 70). இவர், தன்னுடன் வசித்து வந்த உடல் நலம் சரியில்லாத அண்ணன் பாலசுப்பிரமணிய குமார் (74), இறந்துவிட்டதாக கருதி வீட்டின் முன்பு குளிர்பதன பெட்டியில் அவரை உயிருடன் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்ற சூரமங்கலம் போலீசார் குளிர்பதன பெட்டியில் நடுங்கியபடி இருந்த முதியவர் பாலசுப்பிரமணிய குமாரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் முரட்டுத்தனமாகவும், அஜாக்கிரதையாகவும் எந்திரத்தை கையாண்டு காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 சட்டப்பிரிவின் கீழ் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில், கடந்த 3 நாட்களாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் பாலசுப்பிரமணிய குமார் நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென உயிரிழந்தார்.

அதே சமயம் உயிருடன் இருந்தபோது பாலசுப்பிரமணிய குமார் இறந்துவிட்டதாக தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவர் சான்றிதழ் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 11-ந் தேதி கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணிய குமாரை அவரது தம்பி ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அப்போது அவருக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவரை வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறிவிட்டது. இதையடுத்து உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு வீட்டிற்கு சென்ற சரவணன், சிறிது நேரத்தில் மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அப்போது தனது அண்ணன் பாலசுப்பிரமணிய குமார் இறந்து விட்டதாகவும், அவரது உடலை எரிப்பதற்கு சான்றிதழ் கேட்பதாகவும் கூறி இறப்பு சான்றிதழை தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அங்கிருந்த டாக்டர் ஒருவர் பாலசுப்பிரமணிய குமார் இறந்தாரா? உயிரோடு இருக்கிறாரா? என்பதை தெரிந்து கொள்ளாமல் இறப்பு சான்றிதழ் கொடுத்துள்ளார். இதையடுத்து இறப்பு சான்றிதழை பெற்றவுடன் குளிர்பதன பெட்டியை வரவழைத்து அதில் உயிரிழந்தவர்களை வைப்பது போல கை, கால்களை கட்டி அந்த பெட்டியில் பாலசுப்பிரமணியகுமாரை அவரது சகோதரர் சரவணன் வைத்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது பாலசுப்பிரமணிய குமாரை உயிருடன் குளிர்பதன பெட்டியில் அவரது சகோதரர் வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட, அவர் இறந்து விட்டார்.

இதுதொடர்பாக போலீசாரும், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மலர்விழி ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சென்றும் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் உயிருடன் இருந்த நபருக்கு இறப்பு சான்றிதழ் கொடுத்த சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் சான்றிதழ் கொடுத்த டாக்டர் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முதியவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story