தேனியில் 66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மலர் வளையம் வைத்து மரியாதை


தேனியில் 66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மலர் வளையம் வைத்து மரியாதை
x
தினத்தந்தி 22 Oct 2020 9:02 AM GMT (Updated: 22 Oct 2020 9:02 AM GMT)

தேனி ஆயுதப்படை மைதானத்தில் 66 குண்டுகள் முழங்க காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நீத்தார் நினைவு பீடத்தில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தேனி,

நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பணியின் போது வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் நினைவை போற்றும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தேனி ஆயுதப்படை போலீஸ் கவாத்து மைதானத்தில் நேற்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதற்காக அங்கு அமைக் கப்பட்டுள்ள நீத்தார் நினைவு பீடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நினைவு பீடத்தில் தேனி மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த போலீசாரின் பெயர்களுடன் புதிதாக கல்வெட்டு அமைக்கப்பட்டது. அந்த கல்வெட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி திறந்து வைத்தார்.

பின்னர், மாவட்ட கலெக் டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் நினைவு பீடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து பெரியகுளம் சப்-கலெக்டர் சினேகா, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேந்திரன், சங்கரன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கவிதா, ஊர்க்காவல் படை உதவி சரக தளபதி அஜய் கார்த்திக், வட்டார தளபதி செந்தில்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார், வீரமரணம் அடைந்த போலீசாரின் குடும்பத்தினர் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், போலீசார் அணிவகுத்து நின்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, 66 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர். அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த போலீசாரின் நினைவாக அவர்களின் குடும்பத்தினர் கைகளால் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஒவ்வொரு மரக்கன்றுக்கு அருகிலும் வீரமரணம் அடைந்த போலீசாரின் பெயர் பலகை வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போலீசார் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு இளமாறன், இன்ஸ்பெக்டர் சஜூகுமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

கூடலூரில் கடந்த 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றபோது, கூடலூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஏட்டு ராமச்சந்திரசிங், போலீஸ்காரர் ஜோசப் தேவராஜ் ஆகிய 2 பேரும் உயிர்நீத்தனர். இவர்களுக்கு கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் நினைவு கல்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, கூடலூரில் உள்ள அவர்களது நினைவு கல்தூணில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் தினகரபாண்டி, கணேசன், அன்பழகன் மற்றும் தெற்கு, வடக்கு போலீஸ் நிலைய காவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story